தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் சிறப்பாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியுள்ளது.
இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ரொமாரியோ செப்பர்டு ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
முதல் போட்டியில் ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று இருந்த நிலையில் இரண்டாவது போட்டி அதே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி இந்த முறை பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதன்படியே பேட்டிங் துவங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்க ஜோடி 5.4 ஓவர்களில் முதல் விக்கட்டுக்கு 41 ரன்கள் குவித்தது. அதான்சே 21 பந்துகளில் 28 ரன்கள் குவித்த நிலையில் வெளியேறினார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சாய் ஹோப் 22 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் என 44 ரன்கள் குவித்தார். முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய பூரான் இந்த முறை 19 ரன்களில் வெளியேற கேப்டன் ரோமன் போவல் அதிரடியாக விளையாடி 22 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 35 ரன்கள் குவித்தார்.இதனால் டெஸ்ட் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது.
அதற்குப் பிறகு தென்னாப்பிரிக்கா அணி தனது பேட்டிங்கை துவங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ரிக்கல்டன் மற்றும் ஹென்ரிக்ஸ் ஆகியோர் 4.4 ஓவர்களில் முதல் விக்கட்டுக்கு 63 ரன்கள் சேர்த்தனர். ரிக்கல்டன் 20 ரன்கள் வெளியேற, மற்றொரு துவக்க ஆட்டக்காரர் ஹென்றிக்ஸ் 18 பந்துகளில் அதிரடியாக விளையாடி 44 ரன்கள் குவித்தார். அதற்குப் பிறகு களம் இறங்கிய கேப்டன் மார்க்ரம் ஒன்பது பந்துகளில் 19 ரன்கள் குவித்து வெளியேறினார்.
அதற்குப் பிறகு ஸ்டெப்ஸ் மட்டுமே ஓரளவு நிலைத்து நின்று 24 பந்துகளில் 28 ரன்கள் குவித்தார். அதற்குப் பிறகு தென்னாப்பிரிக்க வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிறப்பான பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாததால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை விட 19.4 ஓவர்களில் 149 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. 129 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வலுவான நிலையில் இருந்த தென்ஆப்பிரிக்க அணி அதற்கு பிறகு மேற்கொண்டு 20 ரன்கள் சேர்ப்பதற்குள் ஏழு விக்கெட்டுகளை இழந்து சமீபத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியை நினைவு படுத்தியது.
இதையும் படிங்க:75 நாள் உழைப்பு வீண் போகல.. என் மக்களுக்கு இந்த காரணத்துக்காக பரிசு தொகையை நன்கொடையா தரேன் – முஸ்பிகுர் ரஹீம் பேட்டி
இதனால் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்ற தொடரையும் கைப்பற்றியது. பந்துவீச்சில் சமர் ஜோசப் மற்றும் செப்பர்டு ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். நான்கு ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகள் வீழ்த்திய செப்பர்ட் ஆட்டநாயகன் விருதை வென்றார்.