இன்று டி20 உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் மோதிய போட்டியில் 104 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்று இருக்கிறது. மேலும் டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து எட்டு வெற்றிகளையும் பெற்றிருக்கிறது. வெற்றிக்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோமன் பவல் மிகவும் நம்பிக்கையாகப் பேசியிருக்கிறார்.
இன்று போட்டி நடைபெற்ற செயின்ட் லூசியா டேரன் சமி மைதானம் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருந்தது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங்கை வெஸ்ட் இண்டீஸ் இடம் கொடுத்தது. இதை பயன்படுத்திய வெஸ்ட் இண்டீஸ் துவக்க ஆட்டக்காரர் ஜான்சன் சார்லஸ் 27 பந்தில் 43 ரன், நிக்கோலஸ் பூரன் 53 பந்தில் 98 ரன் எடுத்தார்கள். வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் குறித்தது.
இதைத் தொடர்ந்து விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எந்த ஒரு போட்டியையும் கொடுக்க முடியவில்லை. அந்த அணி 16.2 ஓவரில் 114 ரன்கள் மட்டும் எடுத்து சுருண்டது. வெஸ்ட் இண்டீஸ் அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் சுற்றில் எல்லாப் போட்டிகளையும் வென்றிருக்கிறது.
தற்பொழுது வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 கிரிக்கெட்டின் தரவரிசை பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. மேலும் டி20 கிரிக்கெட்டின் தொடர்ந்து எட்டாவது வெற்றியை பெற்றிருக்கிறது. தலைமை பயிற்சியாளராக இரண்டு டி20 உலக கோப்பைகளை வெஸ்ட் இண்டீஸ க்கு வென்ற டேரன் சமி, கேப்டனாக ரோமன் பவல் வந்த பிறகு டி20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் மீண்டும் சிறப்பாக செயல்பட ஆரம்பித்திருக்கிறது.
வெற்றிக்குப் பின் பேசிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோமன் பவல் “தொடர்ந்து எட்டு வெற்றிகளை பெறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. கடந்த ஓராண்டில் நாங்கள் கடினமாக உழைத்ததை இது காட்டுகிறது. இது சிறந்த பேட்டிங் விக்கெட்டாக இருக்கும் என்று தெரியும். எனவே எங்கள் வீரர்கள் இங்கு வர உற்சாகமாக இருந்தார்கள். கடந்த சில மாதங்களாக நிக்கோலஸ் பூரன் சிறப்பாக இருந்து வருகிறார்.இந்தப் போட்டியில் மெக்காய் 3 விக்கெட் எடுத்ததால் அடுத்து யாரை தேர்வு செய்வது என்பது நல்ல தலைவலியாக இருக்கும்.
இதையும் படிங்க : முடிவு பண்ணி அடிச்சேன்.. ஆப்கனுக்கு எதிரா 3 அணிகள் செய்ய முடியாததை.. தனியாளாக பூரன் செய்து மிரட்டல்
சொந்த மைதானத்தில் விளையாடுகின்ற காரணத்தினால் நிலைமைகளைப் புரிந்து போட்டியை சாதகமாக தொடங்கினோம். நான் கேப்டனாக வந்த பொழுது டி20 கிரிக்கெட்டில் எங்கள் அணி ஒன்பதாவது இடத்தில் இருந்தது. இப்பொழுது மூன்றாவது இடத்திற்கு வந்திருக்கிறது. ரசிகர்கள் எங்களுக்கு தந்து கொண்டிருக்கும் ஆதரவு நம்ப முடியாத அளவுக்கு இருக்கிறது. இதற்கெல்லாம் நான் பயிற்சியாளர் டேரன் சமிக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். எனக்கு கேப்டன் பொறுப்பில் அவர் மிகவும் உந்து சக்தியாக இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.