நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் சி பிரிவில் இடம்பெற்று இருந்த வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தங்களின் முதல் மூன்று போட்டிகளையும் வென்று அடுத்த சுற்றுக்கும் முன்னேறின. இந்த நிலையில் முதல் சுற்றுக் கடைசிப் போட்டியில் இன்று இந்த இரண்டு அணிகளும் மோதிக்கொண்டன. இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நிக்கோலஸ் பூரன் தனி ஆளாக மேஜிக் காட்டி இருக்கிறார்.
இன்றைய போட்டியில் டாஸ் வென்று ஆப்கானிஸ்தான் அணி பந்து வீசியது. வெஸ்ட் இண்டீஸ் அணி ஐந்து விக்கெட் இழப்பு 20 ஓவர்களில் 218 ரன்கள் குவித்தது. அந்த அணியின் நிக்கோலஸ் பூரன் 53 பந்துகளில் 98 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆகி சத்தத்தை தவறவிட்டார்.
இதற்கு அடுத்து பேட்டிங் செய்ய வந்த ஆப்கானிஸ்தான் அணி 16.2 ஓவரில் 114 ரன்கள் மட்டும் எடுத்து, 104 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் மிகச் சிறப்பாக விளையாடிய அணியாக ஆப்கானிஸ்தான் அணி இருந்தது. ஆனால் இன்று அதற்கு வெஸ்ட் இண்டிஸ் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.
மேலும் முதல் சுற்றில் முதல் மூன்று போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி உகாண்டா அணியை 58 ரன்னிலும், நியூசிலாந்து அணியை 75 ரன்னிலும், பப்புவா நியூ கினியா அணியை 95 ரன்னிலும் சுருட்டி இருந்தது. ஆனால் இந்த போட்டியில் நிக்கோலஸ் பூரன் தனியாளாக 98 ரன்கள் குவித்திருக்கிறார். மூன்று அணிகளை விட இவர் அடித்த ரன்கள் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக அதிகம்.
வெற்றிக்குப் பின் ஆட்டநாயகன் விருது பெற்ற நிக்கோலஸ் பூரன் பேசும் பொழுது “98 ரன்னில் யாரும் ரன் அவுட் ஆக விரும்ப மாட்டார்கள். ஆனால் அதைவிட நல்ல டோட்டலை பெறுவதுதான் முக்கியம். நான் ஆரம்பத்திலேயே கண்டிஷனை மதிப்பிட்டேன். பவர் பிளேவில் எங்களுக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. மிடில் ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணியின் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக நான் பொறுப்பேற்க வேண்டி இருந்தது. இன்றைய நாள் என்னுடையது என்று நான் உணர்ந்தேன். என்னால் அதைத் தொடரவும் முடியும்.
இதையும் படிங்க : 104 ரன் வித்தியாசம்.. ஒரே ஓவரில் 36 ரன்.. பூரன் காட்டடி.. ஆப்கானை அடக்கியது வெஸ்ட் இண்டீஸ் அணி
மேலும் விக்கெட்டில் பந்து நின்று திரும்பி வந்தால் விளையாடுவது கடினம். ஆனால் இன்று விக்கெட் நன்றாக இருந்தது. எனவே நான் இதை பயன்படுத்திக் கொண்டேன்.நாங்கள் 12 முதல் 14 மாதங்களாக ஒன்றிணைந்து விளையாடி வருவதின் தொடர்ச்சியாக டி20 கிரிக்கெட் தரவரிசையில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறோம்.கடைசி போட்டியில் ரூதர்போர்டு வாய்ப்பை பயன்படுத்தி அற்புதமாக விளையாடி எங்களை ஊக்கப்படுத்தி இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.