பங்களாதேஷிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ‘சுப்மன் கில்’ சதம் அடித்ததிலிருந்தே அவரது தேர்வு குறித்து இப்பொழுது பல்வேறு விவாதங்கள் நடக்க துவங்கி விட்டன. இந்நிலையில் கேப்டன் ரோஹித் சர்மா இரண்டாவது போட்டியில் பங்கேற்கமாட்டார் என ‘பிசிசிஐ’ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் ‘சுப்மன் கில்’ ன் இடம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சமீபத்திய ஒரு நாள் தொடர்களிலும் சப்மன் கில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார் . இந்திய அணியில் வருங்காலத்தில் தவிர்க்க முடியாத ஒரு வீரராக அவர் இருப்பார். மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடும் திறமையை கொண்ட சுப்மன் கில் இந்திய அணியின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்படுகிறார்.
இவரைப் பற்றி ‘சோனி’ தொலைக்காட்சியில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ‘அஜய் ஜடேஜா’ பேசியுள்ளார் . அதில் அவர் “சுப்மன் கில்-ன் சமீபத்திய ஆட்டங்கள் அவர் இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக உருவாகி வருவதை காட்டுகிறது . மூன்று ‘ஃபார்மெட்’களிலும் சிறப்பாக பங்காற்றக் கூடிய ஒரு வீரருக்கு ஏதேனும் இரண்டு பார்மேட்டுகளிலாவது அதிகமாக விளையாட வாய்ப்பு வழங்க வேண்டும்” என்று கூறினார் .
இது பற்றி மேலும் பேசிய அவர் “இது பற்றி நாம் இங்கு அமர்ந்து கொண்டு,என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் அணி நிர்வாகத்தில் இருப்பவர்கள் அது போன்று செயல்பட முடியாது . அவர்களுக்கு என்று தனி பொறுப்பு இருக்கும் . இருந்தாலும் நல்ல ஃபார்மில் இருக்கும் ஒரு வீரருக்கு அணியில் ஒரு இடத்தை வழங்க அணி நிர்வாகம் முயற்சி எடுக்க வேண்டும்” என்று பேசினார் .
இதனைத் தொடர்ந்து கூறிய அவர்” சுப்மன் கில்லுக்கு வாய்ப்புகள் வழங்குவதற்கு அணி நிர்வாகம் எல்லா முயற்சிகளையும் எடுக்கும். ஆனால் அது எளிதான ஒன்று அல்ல ரோகித் சர்மா அணிக்கு திரும்பும் வேளையில் யாரை நீக்கி விட்டு சப்மன் கில்லை ஆட வைக்க முடியும் ? என்று கேள்வி எழுப்பினார் .
இது பற்றி தொடர்ந்து பேசிய ஜடேஜா “கில் இந்த சதத்தை தனக்கான ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டு அணியில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியில் இருந்து தன்னை நீக்க முடியாத ஒரு வீரராக வளர வேண்டும் . இன்று இந்திய அணியில் இருக்கும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்றவர்களைப் போல் தொடர்ச்சியான சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தி தனக்கான இடத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும் “என்று கூறி முடித்தார் ..