ஐ.சி.சி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான பங்களாதேஷ் இலங்கை அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடர் நேற்று, பங்களாதேஷின் ஷாகூர் அகமத் செளத்ரி மைதானத்தில் துவங்கியது. முதலில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் திமுத் கருணரத்னே பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதன்படி இலங்கை அணிக்கான பேட்டிங்கை துவங்க வந்த ஓஷடா பெர்னாடோ, திமுத் கருணரத்னே ஜோடியை நயீம் ஹசன் வெளியேற்றினார். 66 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டை இழந்த இலங்கை அணிக்கு, அடுத்து ஜோடி சேர்ந்த ஆஞ்சலோ மேத்யூசும், குசல் மென்டிசும் 92 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்து நம்பிக்கை அளித்தனர். குசால் மென்டிஸ் 54 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த தனஞ்செயா டி சில்வாவும் உடனே 6 ரன்களில் வெளியேறினார். ஆனால் அதற்கடுத்து வந்த இலங்கை அணியின் மூத்த வீரரான தினேஷ் சண்டிமால் 66 ரன்கள் எடுத்து, ஆஞ்சலோ மேத்யூசுடன் 136 ரன்கள் பார்ட்டனர்ஷிப்பை அமைத்தார்.
இதற்கிடையில் ஆஞ்சலோ மேத்யூஸ் ஆட்டத்தின் முதல் நாளில் தனது 12வது சதத்தை நிறைவுசெய்து, தினேஷ் சன்டிமாலோடு சேர்ந்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆனால் இரண்டாம் நாள் முதல் செசனில் தினேஷ் சன்டிமால் வெளியேறியதும், நிரோசன் டிக்வெல்லா, ரமேஷ் மென்டிஸ், லசித் எம்புர்டானியா அடுத்தடுத்து வெளியேற, விஷ்வா பெர்னாடோ 84 பந்துகள் தாக்குப்பிடிக்க, அவரின் துணையோடு ஆஞ்சலோ மேத்யூஸ் வேகமாக ரன்களைச் சேர்க்க ஆரம்த்தார். இறுதியாக 199 ரன்களை எடுத்திருந்த நிலையில், நயீம் ஹசன் பந்துவீச்சில் ஷகிப் அல் ஹசனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இலங்கை அணி தற்போது முதல் இன்னிங்சில் 397 ரன்களை எடுத்திருக்கிறது.
இலங்கை அணியில் குமார் சங்கக்கரா. மஹேல ஜெயவர்த்தனேவுக்குப் பிறகு அனுபவமும் திறமையும் உள்ள மூத்த வீரராக ஆஞ்சலோ மேத்யூஸ்தான் உள்ளார். காயங்கள் ஒருபுறம் அவரது கிரிக்கெட் பயணத்தில் பெரும் தடையாக இருந்தாலும், அதையெல்லாம் தாண்டி, இன்று பங்களாதேஷின் சுழற்பந்து வீச்சு மைதானத்தில் நின்று தனியாக போராடி 199 ரன்களை குவித்து அணியை 397 ரன் என்ற நல்ல நிலைக்குக் கொண்டு சென்றிருப்பது சிறப்பான விசயமே. ஏனென்றால் பங்களாதேஷ் அணி அவர்களின் சொந்த மைதானத்தில் மிகவும் வலுவான அணியாகும். பங்ளாதேஷின் தரப்பில் நயீம் ஹசன் 30 ஓவர்கள் வீசி, 4 மெய்டன்கள் செய்து, 105 ரன்கள் தந்து, 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்!