ஆசியக் கண்டத்தில் இருந்து பாகிஸ்தான் அணிக்கு அடுத்தபடியாக இரண்டு ஐசிசி உலகக் கோப்பைகளை வென்ற அணியாக இலங்கை கிரிக்கெட் அணி இருக்கிறது. ஆனால் தற்போது அந்த நாட்டில் கிரிக்கெட் மிக வீழ்ச்சி அடைந்து மோசமான நிலைக்கு சென்று இருக்கிறது. இந்த நிலையில் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் வனிந்து ஹசரங்கா பொறுப்பில் இருந்து அதிரடியாக விலகி இருக்கிறார்.
2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் இலங்கை அணி சுமாராக விளையாடியிருந்தது. இதற்குப் பிறகு அந்த அணியின் கேப்டனாக இருந்து வந்த டசன் சனகா நீக்கப்பட்டார். பிறகு குசால் மெண்டிஸ் கேப்டனாக கொண்டுவரப்பட்டார்.
இந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணி மீண்டும் மோசமாக செயல்பட, இலங்கை டி20 கிரிக்கெட் அணிக்கு வனிந்து ஹசரங்கா கேப்டனாக கொண்டுவரப்பட்டார். வெஸ்ட் இண்டிஸ் சூழ்நிலை இலங்கை சூழ்நிலையை ஒத்து காணப்படும் என்பதால் அந்த அணி சிறப்பாக செயல்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் சுற்றில் இலங்கை அணி தோற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது. அதே சமயத்தில் அந்த பிரிவில் இருந்து பங்களாதேஷ் அணி இரண்டாவது சுற்று முன்னேறி இருந்தது. இதன் காரணமாக வனிந்து ஹசரங்கா கேப்டன்சி மீது நிறைய விமர்சனங்கள் இருந்தது.
தற்போது இலங்கை டி20 அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ஹசரங்கா விலகிக் கொண்டிருக்கிறார். மேலும் லங்கா பிரீமியர் லீக் நடைபெற்று வரும் நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். மேலும் 2026 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : எங்க ஆளுங்க இல்ல.. இப்ப ஆல் பார்மட்ல கில்லி இந்த பையன் தான் – பிரட் லீ பாராட்டு
கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி உள்ள அவர் கூறும் பொழுது “இலங்கை அணிக்கு ஒரு வீரராக என்னுடைய சிறந்த முயற்சிகள் எப்பொழுதும் தொடர்ந்து இருக்கும். நான் எப்பொழுதும் போல அணி மற்றும் கேப்டனுக்கு ஆதரித்து நிற்பேன்” என்று கூறியிருக்கிறார்.