சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இதுவரை மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மறக்க முடியாத போட்டியாக ரசிகர்களுக்கு அமைந்தது. நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் அமெரிக்க அணியை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது.
இந்தத் தொடரில் வழக்கத்துக்கு மாறாக விராட் கோலி பேட்டிங்கில் தடுமாறுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு முன்னர் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி 700க்கும் அதிகமான ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்ததற்கான ஆரஞ்சு தொப்பியையும் வென்றார். இதன் காரணமாகவே ரோஹித் சர்மா உடன் டி20 உலக கோப்பை தொடரில் விராட் கோலி ஓப்பனிங்கில் களம் இறங்கினால் சிறப்பாக இருக்கும் என்று முன்னாள் வீரர்கள் அனைவரும் கருதினர்.
ஆனால் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய மூன்று போட்டிகளிலும் விராட் கோலி 1,4,0 என இதுவரை ஒற்றை இலக்க ரன்களிலேயே வெளியேறி இருக்கிறார். இந்த நிலையில் சூப்பர் 8 சுற்று நெருங்கி வருவதால் விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் போன்ற மைதானங்களில் பேட்டிங் நுணுக்கம் தெரிந்த வீரர்கள் மட்டுமே சிறப்பாக விளையாட முடியும்.
இந்த சூழ்நிலையில் விராட் கோலி திரும்பவும் மூன்றாவது இடத்திலேயே களம் இறங்கி விளையாடுவது சரியானதாக இருக்கும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கூறிவரும் நிலையில், முகமது கைப்பும் அதே கருத்தை கூறியிருக்கிறார். மேலும் விராட் கோலியை மூன்றாம் இடத்திற்கு அனுப்பி ரிஷப் பண்டை ஓபனிங் களமிறக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் விரிவாக கூறும்பொழுது
“இங்கே பேட்டிங் செய்ய கடினமான சூழ்நிலை கொண்ட ஆடுகளத்தில் விராட் கோலி தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி விளையாடுகிறார்.
ஐபிஎல் போல ஃபிளாட் ஆடுகளங்கள் இல்லையெனில் அங்கே நீங்கள் பேட்டிங் செய்வது என்பது மிகவும் கடினம். ஐபிஎல் தொடரில் விளையாடிய விராட் கோலி முன்பு இல்லாததை விட இந்த முறை ஆக்ரோஷமாகவும், அதிரடியாகவும் விளையாடினார். ஆனால் இது போன்ற ஆடுகளங்களில் விராட் கோலி தனது ஆக்ரோசத்தை குறைத்து விக்கெட்டை முதலில் பாதுகாத்து கொள்ள வேண்டும். எனவே விராட் கோலி திரும்பவும் மூன்றாவது இடத்தில் களமிறங்கி இயற்கையான அவரது ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.
இதையும் படிங்க:ரோகித் எனக்கு இதனாலதான் வாய்ப்பு தரல.. சிஎஸ்கே அந்த சூழல் இங்க இல்ல – ஷிவம் துபே பேட்டி
மூன்றாவது இடத்தில் களமிறங்கி நேரம் எடுத்து செட்டிலான பின்னர் கூட 50 முதல் 60 ரன்கள் எடுத்தால் சிறப்பாக இருக்கும். கடந்த உலக கோப்பையில் மூன்றாவது இடத்தில் களம் இறங்கி சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்திருக்கிறார். ஐந்தாவது இடத்தில் களமிறங்கிய ரிஷப் பண்ட் மூன்றாவது இடத்தில் களமிறங்கி சிறப்பாக விளையாட முடியுமானால் அவரால் ஓபனிங்கிலும் களமிறங்க முடியும். இதனால் அவரே ஓபனிங்கும் களமிறங்கலாம்” என்று கூறி இருக்கிறார்