நேற்று 35 பந்தில் 14 வயதில் சதம் அடித்த வைபவ் சூரியவன்சியின் தனிப்பட்ட பயிற்சியாளர் மனிஷ் ஓஜா போட்டிக்கு முன்பாக அவருக்கு என்ன மாதிரியான அறிவுரையை கூறினார் என்று பேட்டியளித்து இருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் 14 வயது சிறுவனின் இந்த சாதனை சதம் பல்வேறு சாதனைகளை முறியடித்து இருக்கிறது. இதன் காரணமாக ஒரே நாளில் இந்தியாவில் பல கோடி மக்களுக்கு தெரிந்த மனிதராக இந்த சிறுவன் மாறி இருக்கிறார். நேற்றிலிருந்து சமூக வலைதளத்தில் இவர்தான் முழுமையான ஆக்கிரமிப்பை செய்து கொண்டிருக்கிறார்.
நான் சொன்ன அறிவுரை
இது குறித்து அவரது பயிற்சியாளர் மனிஷ் ஓஜா பேசும் பொழுது “இது உலகில் எப்போதாவது ஒருமுறை நடக்கக்கூடியது. இதை செய்யக்கூடிய ஆற்றல் வைபவுக்கு இருக்கிறது. நான் நேற்று காலை 10 மணி அளவில் அவரிடம் பேசினேன். முந்தைய போட்டிகளை பார்க்கும் பொழுது வைபவ் கொஞ்சம் ஆக்ரோஷமாகவும் ஆவேசமாகவும் இருந்தது தெரிந்தது. எனவே இது குறித்து நான் அவரிடம் பேசினேன். மேலும் நாம் கிரிக்கெட்டில் நிலைத்து நிற்க வேண்டும் என்றால் ஒரு நேரத்தில் ஒரு பந்தை மட்டும் எடுத்துக்கொண்டு அதன் தகுதிக்கு தகுந்தவாறு விளையாட வேண்டும் என்று கூறினேன்”
“நீங்கள் முன்கூட்டியே இப்படித்தான் விளையாட வேண்டும் என்று நினைத்தால் உங்களுடைய புட் வொர்க் மற்றும் பாடி லாங்வேஜ் வித்தியாசமானதாக இருக்கும். இதன் காரணமாக பந்து எப்படி வருகிறதோ அதற்கு ஏற்றபடி விளையாட வேண்டும். உங்களுக்கு அந்த சிறந்த அணுகுமுறையால் சிறந்த ரிசல்ட் கிடைக்கும்”
நீங்கள் இதை செய்யக்கூடாது
“மேலும் நீங்கள் ஒரே புட்வொர்க்கில் விளையாடினால், எதிரணி உங்களுக்கு மிகச் சுலபமான எதிர்த் திட்டத்தை உருவாக்கி விடும். எனவே அவர் எடுத்து என்ன ஷாட் விளையாடுவார் என்று எதிரில் இருப்பவர்கள் கணிக்க முடியாதபடி விளையாடும்படி கூறினேன். அவர் 40 முதல் 50 பந்துகள் களத்தில் இருந்தால் மொத்தமாக ஆட்டத்தை எடுத்து விடுவார். எதிரணிக்கு அதற்கு மேல் போட்டியில் வாய்ப்பு இருக்காது”
இதையும் படிங்க : அபிஷேக் ஷர்மா ஐந்து டக் அவுட் ஆகணும்.. சாய் சுதர்சன் பண்றது சரியான வேலையா? – இயான் பிஷப் பேட்டி
“வைபவ் எப்பொழுதும் சீனியர்கள் சொல்வதைக் கேட்பார். நீங்கள் நன்றாக கவனித்தால் முதலில் தாக்குதலை ஜெய்ஸ்வால்தான் ஆரம்பிப்பார். ஏனென்றால் வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கு மூத்த வீரர்கள் இப்படியான வழிகாட்டுதலை கொடுக்கிறார்கள். மேலும் இருவருக்குமே நல்ல புரிதலும் இருக்கிறது. ஒருவர் அதிரடியாக விளையாடும் பொழுது மற்றவர் பொறுமையாக இருக்கிறார். இதன் காரணமாக அவருடன் எப்பொழுதும் சமன்பாட்டை பராமரித்துக்கொள்ளும்படி வைபவிடம் நான் கூறியிருக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.