சில நாட்களுக்கு முன்பு பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான முதல் டெஸ்ட் போட்டி இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் இந்திய டெஸ்ட் அணிக்கான துணை கேப்டன் யார் என்று அறிவிக்கப்படவில்லை. தற்போது இதற்கான காரணங்கள் வெளியாகியிருக்கிறது.
இதற்கு முன்பு இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பொறுப்பில் பும்ரா இருந்து வந்தார். தொடர்ந்து அவரே இருப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இப்படியான நிலையில் அவருக்கும் பொறுப்பு தராமல் மற்ற யாருக்கும் பொறுப்பு தராமல் இந்தியத் தேர்வுக்குழு வித்தியாசமாக பிரச்சனைகளை கையாண்டு வருகிறது.
ஹர்திக் பாண்டியா – சூரியகுமார்
டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருந்தார். இந்திய டி20 அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றதும், இயல்பாக அந்த இடத்திற்கு ஹர்திக் பாண்டியா வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சூரியகுமார் யாதவை புதிய கேப்டனாக கொண்டு வந்தார்கள். துணை கேப்டனாக சுப்மன் கில்லை அறிவித்தார்கள்.
எல்லா போட்டிகளிலும் பங்கேற்க கூடிய உடல் தகுதியில் சிறப்பாக இருக்கக்கூடிய வீரர் கேப்டனாக இருக்க வேண்டும் என்று பிசிசிஐ விரும்புவதாக தெரியவந்தது. மேலும் இந்தியத் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஹர்திக் பாண்டியா உடல் தகுதி குறித்து பேசி இருந்தார். தற்போது பும்ரா விஷயத்திலும் அதுவே நடந்திருக்கிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பும்ரா புறக்கணிப்பு – வெளியான காரணம்
இந்த நிலையில் பும்ராவுக்கு அதிகப்படியான ஓய்வு கொடுக்க பிசிசிஐ விரும்புகிறது என்று தெரிகிறது. எனவே அவருக்கு துணை கேப்டன் அல்லது கேப்டன் பதவி கொடுத்தால் அவருக்கு நினைக்கும் பொழுது ஓய்வு தருவது சிக்கலாக இருக்கும் என்று கருதுகிறது. எனவே அவரை பாதுகாக்கும் பொருட்டே அவருக்கு டெஸ்ட் துணை கேப்டன் பதவி ஒதுக்கப்படவில்லை என்று தெரிய வருகிறது.
இதையும் படிங்க : NO 1 பும்ரா இல்லை.. கேஎல் ராகுல் தேர்ந்தெடுத்த.. டாப் 5 பேட்ஸ்மேன் பவுலர்.. ஆச்சரியப்படுத்தும் லிஸ்ட்
இதுகுறித்து வெளியாக இருக்கும் செய்தியில் “பும்ராவை பொருத்தவரையில் அவர் தனது உடலை நன்கு அறிந்தவர். அவர் பங்களாதேஷ் டெஸ்டில் விளையாட விரும்பினால் அவரது தனிப்பட்ட விருப்பத்தில் விடப்படும்.ஆனால் பும்ரா இந்திய அணிக்கு 120 சதவீதம் உடல் தகுதிகள் தேவை என்பதில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் மற்றும் தேர்வாளர்கள் தெளிவாக இருக்கிறார்கள். எனவே அவருக்கு ஓய்வு அவசியமாகிறது. நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகளிலும் அவர் கட்டாயம் தேவை” என்று கூறப்பட்டிருக்கிறது.