இந்திய அணி பங்களாதேஷ் அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக 92 வருட தன்னுடைய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமான மைல்கல்லை எட்டி சாதித்திருக்கிறது.
நடந்து முடிந்த சென்னை சேப்பாக்கம் டெஸ்ட் போட்டிக்கு ஆடுகளம் சிவப்பு மண்ணில் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டது. மேலும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான வானிலை காணப்பட்டது. இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் முதல் ஆறு விக்கெட்டுகளை 144 ரன்களில் இழந்து தடுமாறியது.
சரித்திர வெற்றிக்கு காரணமான அஸ்வின்
இப்படியான நிலையில் ரவீந்திர ஜடேஜா உடன் ஜோடி சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் சதம் அடித்து 199 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைவதற்கு முக்கிய காரணமாக இருந்தார். மேலும் பங்களாதேஷ் அணியை இரண்டாவது இன்னிங்ஸில் சுருட்டி வெற்றி பெறுவதற்கு ஆறு விக்கெட்டுகள் கைப்பற்றி முக்கிய காரணமாகவும் இருந்தார். அவரே ஆட்டநாயகன் விருதும் வென்றார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் முக்கிய இலக்கை அடைந்திருக்கிறது.
இந்திய அணி முதன்முதலாக 1932 ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிராக லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியை விளையாடியது. அங்கிருந்து இந்திய அணி 92 வருடங்களாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடி வருகிறது.
92 வருட வரலாற்று சாதனை
தற்பொழுது பங்களாதேஷ் அணிக்கு எதிராக இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலமாக, இந்திய அணியின் டெஸ்ட் போட்டிகள் வெற்றி 179 ஆக உயர்ந்திருக்கிறது. இதற்கு முன்பாக இந்திய அணி 579 டெஸ்ட் போட்டிகளில் 178 வெற்றி, 178 தோல்வி, 222 டிரா மேலும் ஒரு போட்டி டையில் முடிவடைந்து இருந்தது.
இதையும் படிங்க : சென்னை எனக்கு ரொம்ப ஸ்பெஷல்.. இந்த 2 விஷயங்களைதான் நான் விரும்பறேன் – ரிஷப் பண்ட் பேச்சு
இந்திய அணி இந்த வெற்றியின் மூலமாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தோல்விகளை விட அதிக வெற்றிகள் பெற்ற அணியாக 92 வருடங்களில் முதல் முறையாக முக்கிய மைல்கல்லை எட்டி இருக்கிறது. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தோல்விகளை விட அதிக வெற்றிகள் பெற்ற அணியாக இருப்பது மிகப்பெரிய சாதனையாக கருதப்படும். இப்படியான சரித்திர நிகழ்வு ரோகித் சர்மாவின் தலைமையில் இந்திய அணிக்கு நடந்திருப்பது அவர்களுக்கு பெருமையான ஒன்று!