பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தொடர் அக்டோபர் ஆறாம் தேதி ஆரம்பித்து 12ஆம் தேதி முடிவுக்கு வருகிறது.
இந்திய நட்சத்திர வீரர்கள் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட் விளையாட இருக்கின்ற காரணத்தினால் முக்கிய வீரர்கள் அனைவருக்குமே ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் இளம் வீரர்கள் கொண்ட அணியே களம் இறக்கப்படுகிறது.
முக்கிய வீரர்களுக்கு ஓய்வு
டி20 தொடருக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் இந்திய அணியில் சுப்மன் கில், ஜெய்ஸ்வால், ரிசப் பண்ட், பும்ரா, குல்தீப் யாதவ், அக்சர் படேல் ஆகிய முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் அனைவரும் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட் விளையாட இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் சுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் விளையாடாத பொழுது அபிஷேக் சர்மாவுக்கு மட்டுமே தொடக்க வீரராக வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. ருதுராஜ் எந்தவித காரணமும் கூறப்படாமல் மீண்டும் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்.
மயங்க் யாதவ் மற்றும் வருண் சக்கரவர்த்தி
மேலும் இந்த அணியில் அதிவேக பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் முதல் முறையாக டி20 அணியில் வாய்ப்பு பெறுகிறார்கள். மேலும் 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த அணிக்கு கேப்டனாக சூரியகுமார் யாதவ் செயல்படுகிறார். விக்கெட் கீப்பர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் ஜிதேஷ் ஷர்மா இருவரும் இருக்கிறார்கள். மேலும் காயத்திலிருந்து குணமடைந்து இருக்கும் நிதீஷ் குமார் ரெட்டியும் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க : ஐபிஎல் 2025ல் புது சகாப்தம்.. ஒவ்வொரு மேட்ச்சும் தனி சம்பளம்.. முழு தொடர் ஆடினால் கோடி.. ஜெய் ஷா அறிவிப்பு
பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி :
சூர்யகுமார் யாதவ் (கே), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (வி.கீ.), ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, ரியான் பராக், நிதிஷ் குமார் ரெட்டி, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், வருண் சக்கரவர்த்தி, ஜிதேஷ் சர்மா. (வி.கீ), அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா மற்றும் மயங்க் யாதவ்.