நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அமெரிக்காவில் முதல் சுற்று போட்டிகளை முடித்துக் கொண்டு அடுத்து விளையாடுவதற்கு வெஸ்ட் இண்டீஸ் சென்டர் இருக்கிறது. ஏ பிரிவில் இருந்து முதல் அணியாக இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளரான நியூசிலாந்தின் முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளமிங் இந்திய அணி குறித்து பாராட்டி பேசியிருக்கிறார்.
இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியில் மொத்தம் நான்கு சுழல் பந்துவீச்சாளர்கள் இடம்பெற்று இருக்கிறார்கள். மேலும் 3 வேகப்பந்துவீச்சாளர்களும், ஒரு வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டரும் இடம் பெற்றிருக்கிறார்.
நான்கு சுழல் பந்துவீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்ட காரணத்தினால் ரிங்கு சிங்கை அணியில் தேர்வு செய்ய முடியவில்லை. அப்பொழுது இது பெரிய விமர்சனமாக இருந்தாலும் கூட, வெஸ்ட் இண்டீஸ் சூழ்நிலைகள் சுழல் பந்துவீச்சுக்கு பெரிய அளவில் ஒத்துழைக்கின்ற காரணத்தினால், இந்திய அணித் தேர்வு நியாயமானதாக தெரிகிறது.
இது குறித்து பேசி இருக்கும் ஸ்டீபன் பிளமிங் கூறும் பொழுது “என் பார்வையில் இந்திய அணி சுழல் பந்துவீச்சாளர்களைக் கொண்டு ஆதிக்கம் செலுத்தக்கூடிய அணியாகத் தெரிகிறது. மேலும் இந்த இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதியான அணி.வெஸ்ட் இன்டீஸில் சுழல் பந்துவீச்சு சிறப்பாக செயல்படுவதை நாம் பார்த்திருக்கிறோம்.
மேலும் நியூயார்க்கில் சுழல் பந்துவீச்சுக்கு சாதகம் கிடையாது. எனவே தற்பொழுது முக்கியமான வேலைகளை இந்திய நிர்வாகம் செய்து விட்டதாக நான் நினைக்கிறேன். அவர்கள் புத்திசாலித்தனமான ஒரு பார்வையை பெற்றெடுக்கிறார்கள். இதே வகையில் முக்கிய போட்டிகளான அரைஇறுதி மற்றும் இறுதிப் போட்டியில் செயல்படுவார்கள் என்று நம்புகிறேன்.
இதையும் படிங்க : முடிவு பண்ணிட்டேன்.. இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்னால நாங்க அத செய்யணும் – ஆப்கான் கோச் ஜோனதன் டிராட் பேச்சு
வெஸ்ட் இண்டீஸ் கண்டிஷனை வைத்து பார்த்தால் இந்திய அணி இறுதிப் போட்டியில் இருக்கும். இதற்கான வேலைகளை ராகுல் டிராவிட் மற்றும் வீரர்கள் செய்ததைப்போலவே தெரிகிறது.மேலும் அவர்கள் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் விளையாட வேண்டியது இருக்கும் என்று நினைக்கிறார்கள். இங்குள்ள கண்டிஷன் காரணமாக இந்திய அணி சிறப்பானதாக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.