இன்று டி20 உலகக்கோப்பை தொடரில் டி பிரிவில் இடம் பெற்று இருக்கும் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. பரபரப்பான இந்த போட்டியில் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியிடம் இலங்கை அணி தோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கான காரணங்கள் குறித்து மிகுந்த வேதனை உடன் இலங்கை அணியின் கேப்டன் ஹசரங்கா பேசியிருக்கிறார்.
டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியின் துவக்க ஆட்டக்காரர் பதும் நிஷாங்கா அதிரடியாக 28 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். ஆனால் அவர் கொடுத்த துவக்கத்தை மற்ற இலங்கை பேட்ஸ்மேன்கள் யாரும் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்தது.
இதற்கடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பங்களாதேஷ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் சீக்கிரத்தில் வெளியேறி விட்டார்கள். இதைத் தொடர்ந்து லிட்டன் தாஸ் 38 பந்தில் 36 ரன்கள், தவ்ஹீத் ஹ்ரிடாய் 20 பந்தில் அதிரடியாக 40 ரன்கள் எடுக்க, பங்களாதேஷ அணி இறுதியில் வெற்றி பெறக்கூடிய நிலைக்கு வந்தது.
இந்த நிலையில் துஷாரா வரிசையாக விக்கெட்டுகள் கைப்பற்ற பங்களாதேஷ் அணிக்கு நெருக்கடி உருவானது. அந்த அணிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் இரண்டு விக்கெட் மட்டுமே இருந்தது. பரபரப்பான இந்த நிலையில் 19-வது ஓவரையும் முன்னாள் கேப்டன் சனகா வீசினார். அந்த ஓவரில் அனுபவ வீரர் முகமதுல்லா வெற்றிக்கு தேவையான ரன்களை எடுத்து பங்களாதேஷ் அணியை வெற்றி பெற வைத்தார்.
நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் தொடர்ந்து இரண்டாவது போட்டியில் தோல்வி அடைந்த இலங்கையின் கேப்டன் ஹசரங்கா கூறும்பொழுது “8 முதல் 10 ஓவர்கள் வரை எங்களுடைய பேட்ஸ்மேன்கள் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தார்கள். அதன் பிறகு முடிவு ஓவர்களில் நாங்கள் மோசமாக பேட்டிங் செய்தோம். எங்களது பந்துவீச்சுதான் பலம் என்று எல்லோருக்கும் தெரியும். நாங்கள் பேட்டிங்கில் 150 முதல் 160 ரன்கள் எடுத்தால் எங்களது பந்துவீச்சை வைத்து எளிதாக வெல்ல முடியும்.
இதையும் படிங்க : ஆப்கான்கிட்ட எங்க தோல்விக்கு.. ஐசிசி இதை செய்யாததே காரணம்.. கஷ்டமா இருக்கு – கேன் வில்லியம்சன் பேச்சு
நாங்கள் இரண்டு போட்டிகளாக தொடர்ந்து தோல்வி அடைந்திருக்கிறோம். எங்கள் பிளேயிங் லெவனில் முக்கிய நான்கு பவுலர்களை மட்டும் வைத்திருக்கிறோம். ஆனால் முக்கிய நான்கு பவுலர்களும் அவர்களது வேலையை செய்யாததால் நாங்கள் தோற்றோம். இதன் காரணமாக நாங்கள் ஆல்ரவுண்டரிடம் நான்கு ஓவர்கள் வாங்க வேண்டி இருந்தது. இதுவே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது” என்று கூறியிருக்கிறார்.