இங்கிலாந்து அணிக்கு எதிராக அவர்களது நாட்டில் வைத்து இலங்கை அணி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தி இருக்கிறது.
இலங்கை அணி இங்கிலாந்துக்கு சென்று மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளை இங்கிலாந்து வென்று ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்டது. இப்படியான நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியை வென்று இலங்கை அணி சுற்றுப்பயணத்தை ஓரளவுக்கு நல்ல முறையில் முடித்திருக்கிறது.
பவுலிங் பேட்டிங்கில் திரும்பிய இலங்கை அணி
இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்துவீசியது. இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் முதல் நாளில் மூன்று விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்திருந்தது. இதைத் தொடர்ந்து அடுத்த நாளில் 325 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. கேப்டன் ஒல்லி போப் 154 ரன்கள் எடுத்தார். மிலன் ரத்னாயகே மூன்று விக்கெட் கைப்பற்றினார்.
இலங்கை அணி தன்னுடைய முதல் இன்னிங்சில் 263 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இலங்கை அணிக்கு கேப்டன் தனஞ்செய டி சில்வா 69, பதும் நிசாங்கா 64, கமிந்து மெண்டிஸ் 64 ரன்கள் எடுத்தார்கள். இங்கிலாந்து தரப்பில் ஒன்லி ஸ்டோன் மற்றும் ஜோஸ் ஹல் இருவரும் தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.
இரண்டாவது இன்னிங்ஸில் அபாரம்
இதைத் தொடர்ந்து 62 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து தனது இரண்டாவது இன்னிங்ஸில் 156 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. அந்த அணிக்கு ஜேமி ஸ்மித் மட்டுமே தாக்குப்பிடித்து விளையாடி 67 ரன்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் லகிரு குமாரா 4 விக்கெட் கைப்பற்றினார்.
இதைத்தொடர்ந்து 219 ரன்கள் இழப்பை நோக்கி விளையாடிய இலங்கை அணி நேற்று மூன்றாம் நாள் முடிவில் ஒரு விக்கெட் மட்டும் இழந்து 94 ரன்களை 15 ஓவர்களில் எடுத்திருந்தது. மேற்கொண்டு 9 விக்கெட்டுகள் கைவசம் இருக்க வெற்றிக்கு 125 ரன்கள் தேவைப்பட்டது. இன்று நான்காவது நாள் ஆட்டத்தில் குசால் மெண்டிஸ் 39 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஆனால் ஒரு முனையில் நிலைத்து நின்று விளையாடிய பதும் நிசாங்கா அற்புதமான சதம் அடித்து அசத்தினார்.
இதையும் படிங்க : இந்தியாவில் ODI.. தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு.. ஆப்கனுக்கு எதிராக புதிய திட்டம்.. பல மாற்றங்கள்
இறுதியாக ஆட்டம் இழக்காமல் பதும் நிஷாங்கா 124 பந்தில் 127 ரன்கள் மற்றும் ஏஞ்சலோ மேத்யூஸ் 61 பந்தில் 32 ரன்கள் எடுக்க இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வென்று அசத்தியது. இதற்கு முன்பாக உள்நாட்டில் இந்திய அணிக்கு எதிராக ஒரு நாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றி இருந்தது. மேலும் இங்கிலாந்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இலங்கை அணிக்கு இது நாலாவது டெஸ்ட் வெற்றியாகும். கடைசியாக 2014 ஆம் ஆண்டு லீட்ஸ் மைதானத்தில் வெற்றி பெற்று இருந்தது. தற்பொழுது 10 ஆண்டுகள் கழித்து கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் வெற்றி பெற்று இருக்கிறது.