2024 ஐசிசி ஒன்பதாவது டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதிக்கொண்ட போட்டி வெஸ்ட் இண்டீஸ் செயின்ட் லூசியா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் அசத்தல் சாதனையுடன் இலங்கை ஆறுதல் வெற்றி பெற்று வெளியேறியது.
இந்த போட்டிக்கான டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இலங்கை தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசாங்கா இரண்டு பந்தில் ரன்கள் ஏதும் இல்லாமல் வெளியேறினார். ஆனால் இன்னொரு துவக்க ஆட்டக்காரர் குசால் மெண்டிஸ் 29 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார்.
இதற்கு அடுத்து இலங்கை அணிக்கு தனஞ்செய டி சில்வா 26 பந்தில் 34, சரித் அசலங்கா 21 பந்தில் 46, அஞ்சலோ மேத்யூஸ் 15 பந்தில் 30, கேப்டன் வனிந்து ஹசரங்கா அதிரடியாக 6 பந்தில் 20 ரன்கள் என எல்லோரும் சிறப்பான பங்களிப்பு கொடுக்க, இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்தது. நெதர்லாந்து தரப்பில் வான் பீக் இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.
இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய நெதர்லாந்து அணிக்கு துவக்க ஆட்டக்காரர் மைக்கேல் லெவிட் 23 பந்தில் 31, கேப்டன் எட்வார்ட்ஸ் 24 பந்தில் 31 ரன்கள் எடுத்தார்கள். மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் பெரிய ரன் பங்களிப்பு தரவில்லை. நெதர்லாந்து அணி 16.4 ஓவர்களில் 118 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது.
இறுதியாக இலங்கை அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை அணியின் தரப்பில் நுவன் துஷாரா மூன்று விக்கெட்டுகள், ஹசரங்கா மற்றும் பதிரனா தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.
இதையும் படிங்க : வெறும் 85 ரன்.. போராடிய நேபாள் அணி.. கடைசியில் வென்று இந்திய அணியுடன் பங்களாதேஷ் இணைந்தது
மேலும் டி20 உலகக்கோப்பை வரலாறு எந்த பேட்ஸ்மேன் அரைசதம் அடிக்காமல், அதிக ரன்கள் குவித்த அணியாக இலங்கையணி சாதனை படைத்திருக்கிறது. இலங்கை இந்த போட்டியில் 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது. இதேபோல் இதே உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.