நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் இன்று பங்களாதேஷ் மற்றும் நேபாள் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் வென்ற பங்களாதேஷ் அணி டி பிரிவில் இருந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறி இந்தியா இடம்பெற்றிருக்கும் குழுவில் இணைந்தது.
இன்றைய போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற நேபாள் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் கிங்ஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியிலும் ரன் அடிப்பது பேட்ஸ்மேன்களுக்கு பெரிய சிரமமாக இருந்தது. பங்களாதேஷ் பேட்ஸ்மேன் இடம் இருந்து ரன்கள் வரவில்லை.
பங்களாதேஷ் அணியில் அதிகபட்சமாக ஷாகிப் அல் ஹாசன் 22 பந்தில் 17 ரன், மகமதுல்லா 13 பந்தில் 13 ரன், ரிசாத் ஹோசைன் ஏழு பந்தில் 13 ரன்கள் எடுத்தார்கள். பங்களாதேஷ் 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 106 ரன்கள் மட்டுமே எடுத்தது. நேபாள் தரப்பில் சோம்பால் காமி 2 விக்கெட் வீழ்த்தினார்.
அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நேபாள் அணி 26 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்தது. இதற்கு அடுத்து குசால் மல்லா 40 பந்தில் 27, திபேந்திர சிங் 31 பந்தில் 25 என 58 பந்தில் 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். இந்த ஜோடி விளையாடும்போது நேபாள் அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்தது.இவர்கள் இருவரும் வெளியேறியதும் நேபாள் அணியின் வெற்றி வாய்ப்பும் முடிந்தது.
இறுதியாக நேபாள் அணி 19.2 ஓவரில் 10 விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள் எடுக்க பங்களாதேஷ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பங்களாதேஷ் அணியில் தன்சீம் ஹாசன் சாகிப் 4 விக்கெட், முஸ்தஃபிஷர் ரஹ்மான் மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.
இதையும் படிங்க : சூப்பர் 8ல் இவர் என்ன செய்யப் போறார்னு பார்க்க ஆர்வமாக இருக்கிறேன்.. சஞ்சய் மஞ்சுரேக்கர் பேட்டி
இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகளில் மூன்று வெற்றி பெற்ற பங்களாதேஷ் சூப்பர் எட்டு சுற்றுக்கு டி பிரிவில் இருந்து தென் ஆப்பிரிக்காவுக்கு அடுத்து இரண்டாவது அணியாக முன்னேறியது. மேலும் பங்களாதேஷ், இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடம் பெற்றிருக்கும் குழுவில் இணைந்தது.