ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கு கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி பறந்து சென்றது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி தற்போது வேகப்பந்து வீச்சுக்கு புகழ்பெற்ற மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தில் முகாமிட்டுள்ளது. இங்கு மேற்கு ஆஸ்திரேலிய அணியுடன் இரண்டு பயிற்சி போட்டிகளில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கடுத்து உலகக்கோப்பைக்காக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் வழங்கப்பட்டுள்ள இரண்டு பயிற்சி போட்டிகளிலும் விளையாடுகிறது.
நேற்று முன்தினம் இந்திய அணி பெர்த் மைதானத்தில் சாதாரணமாக ஓட்டப் பயிற்சியை ஆரம்பித்தது. இரண்டாவது நாளான நேற்று அனைத்து இந்திய வீரர்களும் முதல் பயிற்சி அமர்வில் கலந்து கொண்டார்கள்.
இந்த முதல் பயிற்சி அமர்வு குறித்து இந்திய அணியின் தற்போதைய டி20 கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் சூரியகுமார் யாதவ் தனது எதிர்பார்ப்பையும் அனுபவத்தையும் திட்டமிடலையும் பகிர்ந்து கொண்டுள்ளார். அதற்கான வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
#TeamIndia batter @surya_14kumar had his first nets session in Australia. 🗣️Hear in to what he has to say on the conditions down under and preparations going into the @T20WorldCup pic.twitter.com/HaI6hjVNsu
— BCCI (@BCCI) October 9, 2022
முதல் பயிற்சி அமர்வு முடிந்து தேசிய சூர்யகுமார் யாதவ் ” நான் இங்கு வந்து முதல் பயிற்சி அமர்வில் கலந்து கொள்ளவும், மைதானத்திற்குள் நுழையவும், ஓடவும், விளையாடவும் இங்கு எப்படி இருக்கிறது என்று அறிய மிகுந்த ஆவலோடு இருந்தேன். இங்கு வேகம் மற்றும் பவுன்ஸ் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள மிகவும் எதிர்பார்ப்போடு இருந்தேன். இந்த முதல் பயிற்சி அமர்வு மிகவும் ஆச்சரியமாக இருந்தது” என்று கூறியுள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசிய சூர்யகுமார் யாதவ் ” ஆரம்பத்தில் கொஞ்சம் மெதுவாக ஆரம்பித்தேன். வெளிப்படையாக சொல்வதென்றால் என் அடிவயிற்றில் சில பட்டாம்பூச்சிகள் உற்சாகத்தால் பறந்துகொண்டிருந்தது. அதே சமயத்தில் நீங்கள் இங்குள்ள சூழலுக்கு தகுந்தவாறு மதிப்பிட்டு உங்களின் ஆட்ட முறையை அமைக்க வேண்டும். நான் இங்குள்ள சூழல்களை சரியாக மதிப்பிடுகிறேன். உற்சாகம் உள்ளதுதான் ஆனால் அதே நேரத்தில் நீங்கள் உங்கள் செயல்முறை மற்றும் வழக்கத்தையும் மாற்றாமல் பின்பற்ற வேண்டும் ” என்று கூறினார்.
ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் பற்றி சூர்யகுமார் யாதவ் கூறும்பொழுது “பயிற்சியின்போது இங்குள்ள ஆடுகளங்கள் வேகம் மற்றும் பவுன்ஸ், மைதானத்தின் அளவு மிகப் பெரியது என்று கூறினார்கள். இதற்கு தகுந்த மாதரி விளையாட நீங்கள் தயாராக இருக்க வேண்டும். இங்கு எப்படி ரன் பெறுவது என்று உங்களுக்கு திட்டங்கள் இருக்க வேண்டும். இவை அனைத்தும் மிக முக்கியமானது. உண்மையில் நான் இதையெல்லாம் எதிர்பார்க்கிறேன் ” என்று சவால் அளித்து பேசியுள்ளார்!