அடுத்த வருடம் நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் இந்த வருட இறுதியில் நடைபெற இருக்கிறது. வீரர்களின் தக்கவைப்பு விபரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் இன்னும் வெளிவராமல் பாதுகாக்கப்பட்டு இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் தற்போது ஒரு வீரராக விளையாடி வரும் ரோகித் சர்மா, அடுத்த ஆண்டு எந்த ஐபிஎல் அணிக்காக விளையாடப் போகிறார் என்ற கேள்விகள் தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிகரமான கேப்டனாக ரோஹித் சர்மா திகழ்ந்து இருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணியில் ரிக்கி பாண்டிங்கின் பதவி விலகலுக்குப் பிறகு ரோகித் சர்மா மும்பை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து 2013, 15,17, 19, 20 ஆம் ஆண்டுகளில் ஐந்து முறை ஐபிஎல் பட்டங்களை வென்று கொடுத்து மகேந்திர சிங் தோனிக்கு நிகராக சிறப்பான வரலாறு படைத்தார்.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ரோஹித் சர்மாவின் கேப்டன்சி செயல்பாடு குறிப்பிடத்தக்க வகையில் இல்லாததால் கடந்த ஆண்டு கேப்டன் பதவியில் இருந்து விலக்கப்பட்ட, ஹர்திக் பாண்டியா அவருக்கு பதிலாக நியமிக்கப்பட்டார். இந்த சூழ்நிலையில் ரோஹித் சர்மா கடந்த ஆண்டு ஒரு வீரராகவே ஐபிஎல்லில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அடுத்த ஆண்டு அவர் மெகா ஏலத்திற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் மிகப்பெரிய விலைக்குச் செல்லவும் அதிக வாய்ப்பு இருக்கிறது.
குறிப்பாக தற்போது பஞ்சாப் அணியில் கேப்டனாக இருக்கும் ஷிகர் தவான் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெற்றிருக்கும் நிலையில், ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா? என்பது குறித்த தகவல் உறுதியாக தெரியவில்லை. இதனால் ரோஹித் சர்மா பஞ்சாப் அணிக்கு செல்லவே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அவரை வாங்கி கேப்டனாக நியமிக்க பஞ்சாப் அணியும் முடிந்தளவு முயற்சிக்கும் என்று தெரிகிறது
இந்த நிலையில் ரோகித் சர்மா குறித்து முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் பாங்கர் கூறும் போது “நம்முடைய பாக்கெட்டில் பணம் எவ்வளவு இருக்கிறது என்பதை பொறுத்து அது அமையும். ஒருவேளை ரோஹித் சர்மா ஏலத்திற்கு வந்தால் அவர் நிச்சயம் பெரிய விலைக்கு செல்வார் என்று நான் நம்புகிறேன்” என்று சஞ்சய் பாங்கர் சூசகமாக கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:இந்தியா ஆஸியை தாண்டி.. WTC பைனலுக்கு பாகிஸ்தான் போக முடியுமா?.. வியப்பான வாய்ப்புகள்.. முழு விவரம்
பஞ்சாப் அணி வீரர்களை தக்க வைக்க பெரிதும் ஆர்வம் காட்டவில்லை என்ற தகவல் வெளிவரும் நிலையில், ரோகித் சர்மாவுக்காக எவ்வளவு பெரிய விலையாக இருந்தாலும் கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம். எனவே ரோஹித் சர்மா பஞ்சாப் அணிக்கு விளையாடுவாரா? அல்லது மாட்டாரா? என்பது விரைவில் தெரியவரும்.