சமீபத்தில் டி20 வடிவத்தில் இருந்த தனது ஓய்வினை அறிவித்த ரோஹித் சர்மா தற்போது ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.
2007ஆம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி விளையாடி வரும் ரோஹித் சர்மா போட்டிக்கு தயாராகும் விதம் மற்றும் பிட்னஸ் குறித்து சில முக்கிய கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்.
2007ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ரோஹித் சர்மா கிட்டத்தட்ட 15 வருடங்களாக இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் வடிவத்தை சேர்த்து மொத்தமாக ரோஹித் சர்மா 485 போட்டிகளில் விளையாடி 43.15 சராசரியுடன் 48 சதங்களும் 106 அரை சதங்களும் அடித்திருக்கிறார். இதுவரை 19,245 ரன்களை மொத்தமாக அடித்திருக்கிறார்.
பிட்னஸை வைத்து பார்க்கும் போது ரோஹித் சர்மா தனது உடலை பராமரிக்க மறுக்கிறார் என்று அவ்வப்போது சமூக வலைதளங்களில் சில கிண்டல்கள் வெளிவரும் நிலையில், காயம் அடையாமல் விராட் கோலி போன்று ரோஹித் சர்மாவும் தொடர்ச்சியாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். எனவே அவரது பிட்னஸ் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதற்கு இதுவே ஒரு நல்ல உதாரணமாகும்.
சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் ரோகித் சர்மா இது குறித்து கூறும் போது “17 வருடங்களாக விளையாடி தற்போது இந்திய அணிக்காக 500 சர்வதேச ஆட்டங்களில் விளையாட நெருங்கி வருகிறேன். 500 போட்டிகள் என்பது சாதாரண விஷயம் அல்ல, அதை நிறைய கிரிக்கெட் வீரர்கள் விளையாடுவதில்லை. இது போன்று செயல்பட உங்கள் வழக்கத்தில் ஏதேனும் ஒரு விஷயத்தை தொடர்ச்சியாக செய்து வர வேண்டும். உங்கள் உடலை எவ்வாறு நிர்வகிக்கிறீர்கள், ஒரு போட்டிக்கு எவ்வாறு தயாராகிறீர்கள், உங்கள் மனதை எவ்வாறு வைத்துக் கொள்கிறீர்கள் என்பவை மிகவும் முக்கியம்.
நாள் முடிவில் 100% விளையாட தயாராக இருப்பதும், போட்டிகளை வெல்வதும் தான் எங்கள் முக்கியமான வேலை. அதை உற்று நோக்கும் போது உடற்பகுதி என்பது முக்கிய அம்சம் பெறுகிறது. மேலும் டி20 யில் ஓய்வு பெற்றது குறித்து கேட்கிறீர்கள். நான் ஓய்வு பெற்றதற்கு காரணம் இது சரியான தருணம் என்று நினைத்தேன். டி20 வடிவில் நான் 17 வருடங்களில் விளையாடி மகிழ்ந்தேன். டி20 உலக கோப்பையை வென்றதால் ஓய்வு பெற சரியான நேரம் இதுவே என்று முடிவு செய்தேன்.
இதையும் படிங்க:நாங்க இந்தியாவுக்கு சமமா இருக்கோம்.. ஆனா இங்கே இந்த விஷயம் வெறுப்பா இருக்கு – நஜ்முல் சாந்தோ பேட்டி
இந்திய அணிக்காக செயல்படக்கூடிய பல நல்ல வீரர்கள் இருக்கின்றனர் அதனால்தான் இது சரியான நேரம் என்று உணர்ந்தேன்’ என்று ரோஹித் சர்மா கூறுகிறார்.