இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டி20 உலக கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர். குறிப்பாக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி ஆடிய அவரது அதிரடி ஆட்டம் இந்தியாவின் அணுகுமுறையை முற்றிலுமாக மாற்றியது.
இந்த சூழ்நிலையில் இந்த மாற்றத்திற்கு காரணமாக இருந்த இந்திய அணியின் மூன்று பேர் குறித்து ரோஹித் சர்மா சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
2022ஆம் ஆண்டு வரை டி20 கிரிக்கெட்டிலும் இந்திய அணி ஒரு கட்டுக்கோப்பான ஆட்ட முறையை பின்பற்றி வந்தது. அதாவது தொடக்கத்தில் நிதானமாகவும், இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்கும் விதத்தையே பின்பற்றி வந்தது. ஆனால் 2022ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான தோல்வி ரோஹித் சர்மா இந்திய அணியின் அணுகுமுறையை மாற்றுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
எதைப் பற்றியும் கவலைப்படாமல் முதல் பந்தில் இருந்தே அடித்து விளையாடி அதைப் பின்வரும் வீரர்களும் அதே அணுகுமுறையோடு போட்டியை எடுத்துச் செல்லும் விதத்தை அணிக்குள் கொண்டு வந்தார். எனவே இந்த அணுகுமுறைக்கு முக்கிய காரணம் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, இந்தியாவின் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோரின் உதவி பெரிதாக உதவியது என்று கூறி இருக்கிறார்.
இதுகுறித்து சியாட் விருது வழங்கும் விழாவில் ரோஹித் சர்மா பேசும்போது “இந்திய அணியை மாற்றுவது எனது கனவு என்று நினைக்கிறேன். குறிப்பாக புள்ளி விவரங்கள், ஆட்டத்தின் முடிவுகள் குறித்து எதுவும் கவலைப்படாமல் மக்கள் அதிகமாக சிந்திக்காமல் வெளியே சென்று சுதந்திரமாக விளையாடும் சூழலை உறுதி செய்வோம். அதுதான் தற்போது தேவைப்பட்டது.
உண்மையை சொல்வதென்றால் திரு ஜெய்ஷா, திரு ராகுல் டிராவிட், மற்றும் அஜித் அகர்கர் ஆகிய மூன்று தூண்களில் இருந்து எனக்கு நிறைய உதவிகள் கிடைத்தது. நான் நினைத்ததை செய்வதற்கு வெவ்வேறு காலகட்டங்களில் இருந்து வந்து இன்று நாம் சாதித்ததை சாதிக்க உதவிய வீரர்களை மறக்காமல் இருப்பதற்கு எனக்கு இது முக்கியமாக இருந்தது.
இதையும் படிங்க:விராட் ஸ்மித் அசத்துவாங்க.. ஆனா இந்த 22 வயது வீரர் பேட்டிங்கை பார்க்கதான் ஆர்வமா இருக்கேன் – மேத்யூ ஹைடன் பேட்டி
டி20 உலக கோப்பையை வென்றது குறித்து கூறினால் அந்த உணர்வுகளை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. கோப்பையை மீண்டும் வீட்டிற்கு கொண்டு வந்து அதை ரசிகர்களோடு கொண்டாடியது சிறப்பாக இருந்தது. மேலும் ஐபிஎல் தொடரில் ஐந்து கோப்பைகளை வென்றதற்கும் ஒரு காரணம் உள்ளது. நான் இதை நிறுத்தப் போவதில்லை ஏனென்றால், நீங்கள் ஒரு முறை போட்டிகளையும், கோப்பைகளையும் வென்று அதன் சுவையை அனுபவித்து விட்டீர்கள் என்றால் அதற்குப் பிறகு நீங்கள் நிறுத்த மாட்டீர்கள் மற்றும் அதற்காகவே ஒரு அணியாக முன்னோக்கித் தள்ளுவீர்கள். எனவே எதிர்காலத்திலும் இது போன்ற விஷயங்களுக்காக தொடர்ந்து பாடுபடுவோம்” என்று கூறியிருக்கிறார்