பிறந்த நாளன்று அணியிலிருந்து நீக்கப்பட்ட கீரோன் பொல்லார்ட் – காரணத்தை விவரிக்கும் கேப்டன் ரோஹித் ஷர்மா

0
389

இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெறும் போட்டி எந்த அளவுக்கு சுவாரசியத்தை ஏற்படுத்துமோ, அதே அளவுக்கு ஐபிஎல் தொடரை பொருத்தவரையில் மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும்.

இவ்விரண்டு அணிகளுக்கிடையிலான போட்டி தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் இதற்கு முன்னர் இந்த இரு அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது. ரிவர்ஸ் ஃபிக்ஸரில் மீண்டும் இவ்விரு அணிகள் தற்பொழுது மோதிக் கொண்டிருக்கின்றன.

- Advertisement -

பிறந்தநாள் அன்று அணியிலிருந்து நீக்கப்பட்ட கீரோன் பொல்லார்ட்

மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் ஷர்மா எந்த அளவுக்கு முக்கியமான வீரரோ அதே அளவுக்கு கீரோன் பொல்லார்ட் மிகவும் முக்கியமான வீரர். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இந்த இரு அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில் ஒற்றை ஆளாக நின்று மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றி பெற வைத்ததும் குறிப்பிடத்தக்கது.

இன்று தன்னுடைய 35வது பிறந்தநாளை கொண்டாடும் பொல்லார்ட் அணியில் இடம்பெறவில்லை. பிறந்த நாளன்று அணியில் இடம் பெறாத காரணத்தினால் ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர் ஏன் இன்று அணியில் இடம்பெறவில்லை என்ற காரணத்தை கேப்டன் ரோஹித் விளக்கிக் கூறியுள்ளார்.

- Advertisement -

அந்த முடிவுக்கு அவர் தயாராக இருந்தார்

“இது ஒரு கடினமான முடிவு. நடப்பு சீசனில் அவருடைய பங்களிப்பு சுமாராக இருந்துள்ளது. இதுநாள் வரையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் ஆற்றிய பங்களிப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இருப்பினும் நடப்பு சீசனில் அவருடைய பங்களிப்பு சரியாக இல்லாத காரணத்தினால் இந்த கடினமான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது.

அவருக்கு பதிலாக ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் அணியில் களம் இறங்குகிறார். ஆனால் இந்த முடிவை நாங்கள் எடுப்பதற்கு முன்னர் அவராகவே முன்வந்து இந்த முடிவை ஏற்க தயாராக இருந்தார். புதிய வீரர்களை முயற்சி செய்து அவரது ஆட்டத்தை பார்க்க விரும்புகிறோம்”, என்று ரோஹித் விளக்கிக் கூறியுள்ளார்.