“ரோகித் தோனி கிடையாது.. ஆனா அவர் கங்குலி மாதிரி.. தரமான வேலை பார்த்திருக்கார்!” – முன்னாள் இந்திய பயிற்சியாளர் அதிரடி பேச்சு!

0
1388
Rohit

இந்தியாவில் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டு வரும் 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில், இந்திய அணி தான் விளையாடிய எட்டு லீக் போட்டிகளையும் வென்று, தற்பொழுது புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.

நடப்பு உலகக் கோப்பை தொடருக்கு ஒரு மாதத்திற்கு முன்பாக இந்திய அணியின் நிலை குறித்து எல்லோருக்கும் மிகப்பெரிய சந்தேகம் நிலவி வந்தது. எந்தெந்த வீரர்கள் என்னென்ன பங்கை எடுப்பார்கள் என்பது குறித்த தெளிவும் யாருக்கும் கிடையாது.

- Advertisement -

ஏனென்றால் இந்திய அணியின் முக்கிய வீரர்கள் அனைவரும் காயத்தால் பாதிக்கப்பட்டு இருந்தார்கள். இதன் காரணமாக எப்படிப்பட்ட அணி அமையும்? காயத்தில் இருந்து திரும்ப வரும் வீரர்கள் மீண்டும் பழையபடி இருப்பார்களா? முதலில் காயத்திலிருந்து வெளியில் வருவார்களா? என்பது குறித்து பல சந்தேகங்களும் கேள்விகளும் இருந்தது.

ஆனால் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இருவரும் கடைசி நேரம் வரை ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே எல் ராகுல் இருவருக்காக காத்திருந்து அணிக்குள் கொண்டு வந்தார்கள். இது அப்போது பெரிய சர்ச்சையாக மாறிய விஷயம்.

ஏனென்றால் நல்ல உடல் தகுதியுடன் சஞ்சு சாம்சன் மாதிரியான வீரர்கள் வெளியில் இருந்தார்கள். இதன் காரணமாக காயத்தில் இருக்கும் வீரர்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது இல்லை என்கின்ற எதிர்ப்பு எழுந்தது.

- Advertisement -

ஆனால் அதையெல்லாம் மீறி ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் செய்த வேலைகளுக்கான பலன்கள் இப்பொழுது கிடைக்கும் பொழுது, அந்த எதிர்ப்புகள் எல்லாம் காணாமல் போயிருக்கிறது.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் கூறும் பொழுது “காயமடைந்த மற்றும் தன்னம்பிக்கை குறைவாக இருந்த வீரர்களை ரோகித் சர்மா ஆதரித்தார் என்பதுதான் அவருடைய தனிச்சிறப்பு. ஸ்ரேயாஸ், கேஎல்.ராகுல் மற்றும் பும்ரா மூவரும் காயத்திற்கு பிறகு களமிறங்குகிறார்கள். ஆனால் அவர்களுக்கு உலகக்கோப்பையில் ஒரு அங்கமாக இருப்பார்கள் என்கின்ற நம்பிக்கை அளிக்கப்பட்டது.

எந்த ஒரு கேப்டனும் இதைச் செய்தால் ஒரு வீரருக்கு அதைவிட பெரிதான விஷயம் எதுவுமே கிடையாது. இதேபோல செய்த இன்னொரு இந்திய கேப்டன் கங்குலி. அவர் ஹர்பஜன் சிங், சேவாக், ஜாகீர் கான், நெக்ரா என பல வீரர்களை இப்படி ஆதரித்திருக்கிறார். ஒரு கேப்டனாக ரோஹித் சர்மாவின் சிறந்த பங்களிப்பு இது!” எனக் கூறியிருக்கிறார்!