இன்று முதல் ஐசிசி ஒன்பதாவது டி20 உலக கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் துவங்கியிருக்கிறது. இந்த நிலையில் நேற்று இந்திய அணி தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாடியது. இந்த போட்டியில் துவக்க வீரர் இடத்தில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் ஆறு பந்தில் ஒரு ரன் மட்டும் எடுத்து வாய்ப்பை வீணடித்தார். இது குறித்து சுனில் கவாஸ்கர் பேசியிருக்கிறார்.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சஞ்சு சாம்சன் 500 ரன்கள் தாண்டி அடித்தார். ஒரு ஐபிஎல் தொடரில் முதல் முதலில் அவர் 500 ரன்கள் தாண்டி எடுத்தது இந்த முறைதான். இந்த காரணத்தினால் கேஎல் ராகுலை பின்னுக்கு தள்ளி சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
அதே சமயத்தில் அவருக்கு ஐபிஎல் தொடரின் இறுதியில் மூன்று முக்கிய இன்னிங்ஸ்கள் மோசமாக சென்றது. அதன் காரணமாக அந்த அணி வெற்றி பெறவும் தவறியது. இல்லையென்றால் அவர்கள் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடிப்பதற்கு ஒரு வாய்ப்பு இருந்தது.
இந்த நிலையில் நேற்று பங்களாதேஷ் அணிக்கு எதிராக சஞ்சு சாம்சன் துவக்க வீரராக கொண்டுவரப்பட்டார். பந்து காற்றில் நன்றாக ஸ்விங் ஆகிய நிலையில், அவரால் தாக்குப் பிடித்து விளையாட முடியவில்லை. எனவே 6 பந்தை சந்தித்த அவர் ஒரு ரன் மட்டுமே எடுத்து வெளியேறினார். அதே சமயத்தில் ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி 32 பந்தில் ஆட்டம் இழக்காமல் 53 ரன் எடுத்தார்.
இது குறித்து சுனில் கவாஸ்கர் பேசும்பொழுது ” விக்கெட் கீப்பிங் திறமையை மட்டுமே ஒப்பிட்டுப் பார்த்தால் சாம்சனை விட ரிஷப் பண்ட் மிகவும் சிறப்பானவராக இருக்கிறார். நான் இங்கு பேட்டிங் பற்றி கூறவில்லை. ஆனால் அதுவும் பார்க்க வேண்டிய ஒரு அம்சம்தான். கடந்த சில போட்டிகளாக ஐபிஎல் தொடரில் இருந்து சிறப்பாக விளையாடவில்லை. ஆனால் ஐபிஎல் சீசனை அவர் தொடங்கிய விதத்தில் மிகச் சிறப்பாக விளையாடினார்.
இதையும் படிங்க : தோனிக்கு கோலிக்கு இருக்கும் டெக்னிக் கிடையாது.. நிதிஷ் ரெட்டிக்கு கண்டனம்.. உண்மையில் என்ன நடந்தது?
அவர் டி20 வடிவத்தில் கடந்த மூன்று நான்கு போட்டிகளாக நன்றாக விளையாடவில்லை. அவர் பங்களாதேஷ் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் கிடைத்த ஒரு வாய்ப்பை தவற விட்டு விட்டார். அவர் அரை சதம் அடித்திருந்தால் இங்கு பேச்சே இருந்திருக்காது. அடுத்து ரிஷப் பண்ட்டை விக்கெட் கீப்பராக விளையாட வைக்க இந்திய அணி நிர்வாகம் யோசிக்கும்” என்று நினைக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.