இந்தியா பங்களாதேஷ் அணிகள் மோதிக்கொண்ட முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. மேலும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு ஆடுகளம் எப்படி அமைக்கப்படும் என்பது குறித்து தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்ற சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் வேகபந்து வீச்சுக்கு சாதகம் கொடுக்கும் வகையிலும், அதே சமயத்தில் நான்கு மற்றும் ஐந்தாவது நாட்களில் சுழல் பந்துவீச்சுக்கு சாதகத்தை கொடுக்கும் வகையில் மாறும்படியும் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது. இந்தியாவில் சமீபத்தில் அமைக்கப்பட்ட சிறந்த டெஸ்ட் ஆடுகளமாக இருந்தது.
பங்களாதேஷ் 2வது டெஸ்ட் போட்டி
இதைத் தொடர்ந்து பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகின்ற செப்டம்பர் 27ஆம் தேதி உத்தர பிரதேஷ் மாநிலம் கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கு எப்படியான ஆடுகளம் அமைக்கப்படும்? என்கின்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் போல் வேகத்திற்கு சாதகம் இல்லாமல் தட்டையான அதே சமயத்தில் மெதுவான ஆடுகளமாக அமைக்கப்படுகிறது. மேலும் இந்த வகை ஆடுகளத்தில் பவுன்ஸ் மிகவும் குறைவாக இருக்கும். இன்னும் சொல்லப் போனால் இது பங்களாதேஷ் சுழல் பந்துவீச்சாளர்கள் வீசும் வரைக்கும் சாதகமான ஆடுகளமாகவே இருக்கும். மேலும் இது களிமண்ணால் உருவாக்கப்படும் கருப்பு மண் ஆடுகளம் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு அணியிலும் மாறும் பிளேயிங் லெவன்
முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணியில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகம் இருந்த காரணத்தினால் 3 வேகப் பந்துவீச்சாளர்கள் இடம் பெற்று இருந்தார்கள். இரண்டு அணியிலுமே ஒரு வேகப்பந்துவீச்சாளர் நீக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இல்லையென்றால் இங்கிலாந்து போல பங்களாதேஷ் அணி ஒரே ஒரு வேகப்பந்துவீச்சாளரையும் மூன்று சுழல் பந்துவீச்சாளரையும் வைத்துக்கூட வரலாம்.
இதையும் படிங்க : சென்னை டெஸ்ட்.. மக்கள் இப்படி ஆயிட்டாங்களே.. விராட் கோலி ரொம்ப வருத்தப்பட்டார் – அஸ்வின் வெளியிட்ட தகவல்
இந்திய அணியை பொறுத்தவரையில் கட்டாயம் இரண்டு வேகப் பந்துவீச்சாளர்கள் விளையாடுவார்கள். அதே சமயத்தில் மூன்றாவது சுழல் பந்து வீச்சாளருக்கான இடத்தில் குல்தீப் யாதவ் அல்லது அக்சர் படேல் இருவரில் ஒருவர் இடம் பெறுவார்கள் என்று தெரிகிறது. சுழல் பந்துவீச்சில் பங்களாதேஷ் அணி சிறப்பாக செயல்படும் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்பாக செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.