இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய இரண்டாவது பந்துவீச்சாளராக ரவிச்சந்திரன் அஸ்வின் இருக்கிறார். அவர் ஒரு குறிப்பிட்ட பந்துவீச்சு வகையை கற்று தேர்வதற்கு தனக்கு இரண்டு வருடங்கள் ஆனது என்று குறிப்பிட்டிருக்கிறார்.
பொதுவாக இந்திய கிரிக்கெட்டில் ரவிச்சந்திரன் அஸ்வினை ஒரு ஆராய்ச்சியாளர் என்ற அளவில் எல்லோரும் பாராட்டுவார்கள். சின்ன விஷயங்களாக இருந்தாலும் அதை கவனத்தில் எடுத்து ஆராய்ந்து அதனுடைய முடிவு எப்படி இருக்கிறது என்று பார்க்கக் கூடியவர். இதனால் இவரை வீரேந்திர சேவாக் கிரிக்கெட் சயின்டிஸ்ட் என்று அழைப்பார்.
அஜந்தா மெண்டிஸ் கண்டுபிடிப்பு
பந்துவீச்சில் சில புதிய கண்டுபிடிப்புகளை சில பந்துவீச்சாளர்கள் கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த வகையில் வலதுகை சுழல் பந்துவீச்சாளரான இலங்கையின் அஜந்தா மெண்டிஸ் பந்து வீசும் கையின் நடு விரலை மட்டுமே பயன்படுத்தி வலது கை பேட்ஸ்மேன்களுக்கு பந்தை வெளியில் எடுக்கும் கேரம்-பால் முறையை கண்டுபிடித்தார்.
ஆரம்ப கட்டத்தில் அவருடைய இந்த புதுமையான பந்துவீச்சை கணிக்க முடியாமல் எல்லா பேட்ஸ்மேன்களும் சிக்கினார்கள். பிறகு இந்திய பேட்ஸ்மேன்கள் அவர் கேரம்-பால் வீசும் வித்தியாசத்தை கண்டுபிடித்து பின்பு அடித்து நொறுக்கினார்கள். அதற்குப் பிறகு அவருடைய கிரிக்கெட் வாழ்வு கொஞ்சம் கொஞ்சமாக முடிவுக்கு வந்துவிட்டது.
அஸ்வின் கற்று வந்த காலம்
இந்த நிலையில் எதையும் புதிதாக கற்றுக் கொள்வதில் ஆர்வம் இருந்த ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த கேரம்-பால் முறையை கற்றுக்கொண்டு சர்வதேச கிரிக்கெட்டில் வெற்றிகரமாக செயல்படுத்தியும் இருக்கிறார். மேலும் ஐபிஎல் போன்ற அதிரடியான தொடர்களில் ஆப் ஸ்பின்னர்கள் அதிக ரன்களுக்கு செல்வது வழக்கம். ஆனால் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த கேரம் பால் முறையை பயன்படுத்தி தன்னுடைய எக்கானமியை மிகவும் சிறப்பாக வைத்திருக்கிறார்.
இந்த நிலையில் இந்த பந்து வீச்சு முறையை கற்றுக் கொள்வதற்கு தனக்கு என்ன காலமானது என்பது குறித்து பேசி இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது “நான் 2006 அல்லது 2007 ஆம் ஆண்டு முதல் கேரம்-பால் வீச வலையில் பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். அப்போது நான் முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகம் ஆகி இரண்டாவது சீசனாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
இதையும் படிங்க : பாபர் அசாமின் 10 இன்னிங்ஸ் சோகம்.. ஸ்பெஷல் சில்வர் டக்.. பாகிஸ்தான் மண்ணில் முதல் பரிதாபம்
2008ஆம் ஆண்டு விஜய் ஹசாரே டிராபியில் நான் கேரம்-பால் வீசினேன். இதை நான் நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு எனக்கு இரண்டு வருடங்கள் தேவைப்பட்டது. அதே பந்தை 2010 ஆம் ஆண்டு நான் சரியான வேகத்தில் வீசிய பொழுது அந்த பந்து குறித்து நான் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தேன்” என்று கூறியிருக்கிறார்.