இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பயிற்சியாளர்களின் ஆதிக்கம் அணியில் இருப்பதும் வீரர்கள் பயிற்சியாளர்களை அதிகம் சார்ந்து இருப்பதும் மிகவும் ஆபத்தான போக்கு என வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
கிரிக்கெட் என்பது வீரர்கள் தங்களுடைய போக்கில் சூழ்நிலைக்கு தகுந்தவாறு புதிய சிந்தனைகளை கொண்டு வந்து முடிவுகள் எடுப்பது என்றும், மற்றவர்களை அதிகம் சார்ந்திருப்பதின் காரணமாக சுயமாக யோசிக்கும் முடிவு எடுக்கும் திறனை இழந்து விடுவார்கள் என்றும் எச்சரிக்கை செய்திருக்கிறார்.
பயிற்சியாளர்களை சார்ந்து இருக்கக் கூடாது
இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது “நிறைய வீரர்கள் பயிற்சியாளர்கள் அல்லது வழிகாட்டிகள் அல்லது தனிப்பட்ட நபர் ஒருவரை சார்ந்து இருக்கிறார்கள். இது மிகவும் ஆபத்தான போக்கு என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் நீங்கள் ஒருவரை அதிகமாக சார்ந்து இருக்கும் பொழுது நீங்கள் புதிதாக எதையும் சிந்திக்க மாட்டீர்கள்.
பயிற்சியாளர் உங்களுக்கு பலதரப்பட்ட விஷயங்களுக்கு தீர்வு சொல்லலாம். ஒரு குறிப்பிட்ட வீரருக்கு வேலை செய்யும் ஒரு தீர்வு இன்னொரு வீரருக்கு வேலை செய்யாமல் போகலாம். நான் நவீன பயிற்சி காலத்தில் உடன்படாத ஒருவிஷயம் என்னவென்றால், ஒரு வீரருக்கு வேலை செய்த விஷயம் இன்னொரு வீரருக்கும் வேலை செய்யும் என்று அப்படியே நகலெடுக்கிறார்கள். ஒரு கிரிக்கெட் வீரராக உங்களுக்கு நிறைய சவால்கள் வரும். எனவே நீங்கள் சொந்தமாக பதில்களை கண்டுபிடிக்க வேண்டும்.
என் பயிற்சியாளரின் அணுகுமுறை
என்னுடைய பயிற்சியாளர் டபிள்யூ.வி.ராமன் நான் புதிதாக முயற்சி செய்வதற்கு என்னை அனுமதித்தார். நான் எந்த பாதையில் எப்படி பயணிக்க வேண்டும் என்று எனக்கு கற்றுக் கொடுத்தார். ஆனால் பயணிக்க வேண்டிய பாதை இதுதான் என்று அவர் எனக்கு எதையும் திணிக்கவில்லை. என்னுடைய ஆரம்ப நாட்களில் என்னுடைய பயிற்சியாளர் எப்படி இருந்ததால் நான் யாரையும் அதிகம் சார்ந்து இருக்கவில்லை.
இரண்டாவது நபர் ஒருவரின் கருத்தை பெறுவது மோசமானது கிடையாது. ஆனால் கிரிக்கெட் என்பது நீங்கள் பெரிய அளவில் சுயமாகக் கற்றுக் கொள்ள வேண்டிய விளையாட்டு. நீங்கள் சொந்தமாக கற்றுக் கொள்ளவில்லை என்றால், உங்களுக்கு நீங்களே கற்பித்துக் கொள்ளவில்லை என்றால், யாரையாவது சார்ந்து இருப்பீர்கள் என்றால், இது மிகவும் ஆபத்தான பகுதியாகும்.
இதையும் படிங்க : 2024 டி20 உலககோப்பை.. நான் அணியில் செய்தது இந்த விஷயம் மட்டும்தான் – ராகுல் டிராவிட் பேட்டி
பயிற்சியாளர்களுடன் இருக்கும் வீரர்களோ அல்லது மற்றவர்களை சார்ந்து இருக்கும் வீரர்களோ சரியாக செயல்பட மாட்டார்கள் என்று நான் கூறவில்லை. ஆனால் அது உங்களை ஒரு குறுகிய வட்டத்தில் அடைத்து விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு என்று சொல்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.