நேற்று ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், ஹைதராபாத் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியை எளிதாக வெல்லக்கூடிய இடத்திற்கு வந்து ராஜஸ்தான் தோற்றது. இது குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் இளம் வீரர் ரியான் பராக் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசி இருக்கிறார்.
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி ஆரம்பத்தில் சுமாராக ஆரம்பித்து, இறுதியில் மூன்று விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் என அருமையாக முடிந்தது. அந்த அணியின் நிதீஷ் குமார் ரெட்டி மிகச் சிறப்பான ஆட்டத்தை பேட்டிங்கில் வெளிப்படுத்தி 76 ரன்கள் எடுத்திருந்தார்.
இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணிக்கு ஜெய்ஸ்வால் மற்றும் ரியான் பராக் இருவரும் 78 பந்துகளில் 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். இந்த ஜோடி அடுத்தடுத்து வீழ்ந்தது. ஜெய்ஸ்வால் 40 பந்தில் 67 ரன்கள், ரியான் பராக் 49 பந்தில் 77 ரன்கள் எடுத்தார்கள். பிறகு ஒரு பந்தில் இரண்டு ரன் என்கின்ற எளிய நிலைக்கு வந்து கூட, கடைசிப் பந்தில் ரோமன் பவல் ஆட்டம் இழக்க ராஜஸ்தான் அணி தோற்றது.
இது குறித்து ரியான் பராக் நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசும்பொழுது “நான் முன்னேற்றம் அடைய நிறைய ஏரியாக்கள் கிடைத்திருக்கின்றன. நான் என்னுடைய சிறந்த பார்மில் இல்லை. இருந்திருந்தால் ஆட்டத்தை முடித்து இருப்பேன். நான் என்னுடைய தவறுகளில் இருந்து கற்றுக் கொள்ள முயற்சி செய்கிறேன். அவற்றை மீண்டும் செய்யாமல் இருக்க முயற்சி செய்கிறேன். இது என்னுடைய சிறந்த இன்னிங்ஸா? என்று கேட்டால் நிச்சயம் கிடையாது. சதம் அடித்தால் வேண்டுமானால் சொல்லலாம்.
தோல்வியுடன் முடிப்பது எப்போதும் சரியானது கிடையாது. நாங்கள் நிறைய விஷயங்களை சரியாக செய்தோம். எல்லாவற்றிலும் நாங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தற்போது புள்ளி பட்டியலில் நாங்கள் நல்ல நிலையில் இருக்கிறோம். இது ஒரே ஒரு மோசமான ஆட்டமாக அமைந்துவிட்டது. நாங்கள் சில தவறுகளை தான் செய்தோம். ஆனால் இது ஐபிஎல் தோற்க அதுவே போதும்.
இதையும் படிங்க : 6 புள்ளி ஆர்சிபி பிளே ஆப் போலாம்.. 16 புள்ளி ராஜஸ்தான் வெளியவும் போலாம்.. விறுவிறு ஐபிஎல் 2024 பட்டியல்
நாங்கள் யாரும் விக்கெட்டுகளை வீணாக இழக்க கிடையாது. நடராஜன் மெதுவான பவுன்சர்கள் வீசினார். எனவே ஜெய்ஸ்வால் அடுத்து யார்க்கரை கணித்து ஸ்கூப் ஆட சென்றார். நான் அந்தப் பந்தை சிக்ஸருக்கு அடிக்க சென்றேன். நாங்கள் கடைசி வரை இருக்க விரும்பினோம் என்று கூறி இருக்கிறார்.