“தோனி இடத்தில் மக்கள் என்னை பார்க்கிறார்கள்!” – இஷான் கிஷான் பரபரப்பான பேச்சு!

0
420
MSD

இந்திய கிரிக்கெட் அணியில் இது பெரிய மாற்றத்திற்கான காலமாக இருக்கிறது. சச்சின் சேவாக் கம்பீர் யுவராஜ் சிங் ஆகியோர் விடைபெற்ற பின்பு இப்படியான ஒரு காலக்கட்டம் இந்திய கிரிக்கெட்டில் நிலவியது.

அப்போது மிகச் சரியான புதிய வீரர்கள் வந்து அவர்களது இடத்திற்கு நியாயம் செய்து தங்களது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்கள். தற்பொழுது சில இடங்களுக்கு சில வீரர்கள் இந்திய கிரிக்கெட்டில் தேவைப்படுகிறார்கள்!

- Advertisement -

இந்த வகையில் பேட்டிங்கை எடுத்துக் கொண்டால் இசான் கிசான், ருத்ராஜ், சஞ்சு சாம்சங், ஸ்ரேயாஸ் ஆகியோரும், பந்துவீச்சில் அர்ஸ்தீப், ரவி, உம்ரான் மாலிக் ஆகியோரும் புதிய வீரர்களாக நம்பிக்கை அளித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களிலிருந்து இந்திய அணிக்கான நிரந்தர வீரராக யார் மாறுகிறார்கள் என்பதற்கு ஒரு பெரிய ஓட்டம் தேவைப்படுகிறது!

மிகச் சமீபத்தில் பங்களாதேஷுக்கு எதிரான ஒரு நாள் தொடரின் இரண்டாவது போட்டியில் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா காயம் அடைந்து விளையாட முடியாமல் போனதால் மூன்றாவது போட்டியில் துவக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய இசான் கிசான் இரட்டை சதம் அடித்து அசத்தினார். இது அதிவேக இரட்டை சதம் ஆகவும் பதிவாகியது.

இந்த ஆட்டத்தின் மூலம் அவரது தன்னம்பிக்கை வெகுவாக அதிகரித்து இருக்கிறது. துவக்க இடத்தில் சேவாக் சென்ற பிறகு அவரது அதிரடியில் தொடர ஒரு வீரர் இந்திய அணிக்கு மிக அதிகமாகவே தேவைப்படுகிறார். இவர் அவரது இடத்தை நிரப்புவார் என்ற பேச்சு இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் இது குறித்து எல்லாம் பேசி உள்ள இஷான் கிஷான் ” மக்கள் என்னை மகேந்திர சிங் தோனி பாயுடன் ஒப்பிடும்போது நான் அதை நேர்மறையாகவே எடுத்துக் கொள்கிறேன். என்னிடம் ஏதோ இருக்கிறது என்று உணர்கிறேன். அதனால்தான் மக்கள் என்னை அவரிடத்தில் வைத்து பார்க்கிறார்கள் என்று நினைக்கிறேன். என்னாலும் சாதிக்க முடியும் என்று நம்புகிறேன். அவர் கிரிக்கெட்டில் நாட்டுக்காக செய்ததில் 70% நான் செய்தால் மகிழ்ச்சி அடைவேன். அவர் 20 ஓவர் உலகக் கோப்பை 50 ஓவர் உலகக் கோப்பை சாம்பியன்ஸ் டிராபி என முக்கியமான கோப்பைகளை நாட்டுக்காக பெற்றுக் கொடுத்திருக்கிறார். நானும் அப்படி இருக்க விரும்புகிறேன்!” என்று தெரிவித்துள்ளார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” இரட்டை சதம் அடித்த பின்னாலும் நான் அதே வீரன்தான். நான் இரட்டை சதம் அடித்த மறுநாள் என் அம்மா என்னை அழைத்து ‘ அது முடிந்து விட்டது அதை மறந்து விடு’ என்றார். மேலும் இப்போது நீ ரஞ்சி போட்டிக்கு சென்று அங்கு ரன்கள் குவிக்க வேண்டியது அவசியம் என்று கூறினார். நாங்கள் பங்களாதேஷில் ஒரு நாள் தொடரை வெல்லவில்லை ஆனால் அது எனக்கு ஒரு நல்ல கற்றலாக அமைந்தது!” என்று தெரிவித்துள்ளார்!