இன்று இரண்டு போட்டிகளில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த மும்பை மற்றும் சென்னை அணிகள் மோதிக்கொண்ட போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது!
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் எட்டு விக்கெட்டுகள் இழந்து 20 ஓவர்களுக்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்தது.
சென்னை அணியின் பந்துவீச்சாளர்களின் செயல்பாடு இந்த போட்டியில் மிக மிகச் சிறப்பாக இருந்தது. குறிப்பாக பதிரனாவின் பந்துவீச்சு மிகச் சிறப்பாக இருந்தது.
இந்தப் போட்டியில் நான்கு ஓவர்கள் பந்து வீசிய அவர் வெறும் 15 ரன்கள் மட்டும் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இறுதிக்கட்ட ஓவர்களில் இரண்டு ஓவரை வீசிய அவர் வெறும் ஏழு ரன்கள் மட்டும் தந்து மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
தொடர்ந்து விளையாடிய சென்னை அணியின் பேட்ஸ்மேன்களும் மிகச் சிறப்பாக செயல்பட்டு இலக்கை 17.4 ஓவர்களில் எட்டி அற்புதமான வெற்றியைப் பெற்றார்கள்.
வெற்றிக்குப் பின் பதிரனா குறித்து மகேந்திர சிங் தோனி நிறைய பேசினார். அவர் பேசும் பொழுது ” பதிரனா வழக்கமான பவுலிங் ஆக்சன் கொண்டவர் கிடையாது. பேட்ஸ்மேன்கள் அவரது பந்துவீச்சை கணிப்பதற்கும் அவரை பின்தொடர்வதற்கும் மிகவும் சிரமப்படுவார்கள். அவரது கன்சிடென்சி, வேரியேஷன், வேகம் அவரை ஸ்பெஷல் ஆக்குகிறது.
அவர் எந்த அளவுக்கு கிரிக்கெட் விளையாடுகிறார் என்று கவனிப்பதுதான் மிக முக்கியம். அவர் சிவப்புப் பந்து போட்டிகள் விளையாடக்கூடாது. அவர் ஒருநாள் மட்டும் ஐசிசி போட்டிகளில் மட்டும் விளையாட வேண்டும். மீதமுள்ள போட்டிகளில் இருந்து அவரை குறைவாக வைத்து பாதுகாக்க வேண்டும்.
ஏனென்றால் அவர் தன்னை நிறைய மாற்றிக் கொள்ளக் கூடியவர் கிடையாது. தொடர்ந்து இதையேதான் செய்யப் போகிறவர். எனவே நீங்கள் எப்பொழுதும் அவரை முக்கியமான நேரங்களில் பயன்படுத்தலாம். அவர் அனைத்து ஐசிசி போட்டிகளுக்கும் தகுதியானவர் மற்றும் அவர் கிடைக்கக்கூடியவராக இருக்கிறார் என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
மேலும் அவர் இலங்கை அணிக்கு ஒரு பெரும் சொத்து. அவர் உண்மையிலேயே ஒரு இளம் பையன் என்பதை மறந்து விடக்கூடாது. கடந்த முறை வந்த பொழுது மெலிந்தவராக இருந்தார் தற்பொழுது கொஞ்சம் சதை கூடி இருக்கிறது. அவர் இலங்கை கிரிக்கெட்டில் நீண்ட காலம் பணியாற்றுவார் என்று நினைக்கிறேன். அவர் எவ்வளவு தொடர்ந்து பந்து வீசுகிறார் என்று கண்காணிப்பது மிகவும் முக்கியம்!” என்று கூறியிருக்கிறார்!