இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் இன்று நடைபெற உள்ள நிலையில் இரண்டு அணி வீரர்களும் இதில் விளையாட எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான பார்த்தீவ் பட்டேல் இந்திய வீரர் குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
சமீபத்தில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது விக்கெட் கீப்பர்களாக துருவ் ஜூரேல் மற்றும் கே எஸ் பரத் ஆகியோர் செயல்பட்டுக் கொண்டிருந்தனர். காரணம் கடத்த 2022ம் ஆண்டு கார் விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக ரிஷப் பண்ட் நீண்ட காலம் ஓய்வெடுத்து வந்தார்.
தற்போது 632 நாட்களுக்குப் பிறகு அவரது காயம் குணமாகி கிட்டத்தட்ட இரண்டு வருட இடைவெளிக்குப் பின் மீண்டும் இந்திய அணிக்காக டெஸ்ட் தொடரில் களம் இறங்க இருக்கிறார். இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான பார்த்தீவ் பட்டேல் ரிஷப் பண்ட்டின் கம்பேக் குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் போது “பண்ட் ஒரு சிறந்த முன்மாதிரியாக அமைந்துள்ளார். அவர் காயம் அடைந்து இந்திய அணிக்கு திரும்பும் விதம் நிச்சயம் அனைவருக்கும் ஒரு உத்வேகமாக அமைந்துள்ளது. தனிப்பட்ட விதத்தில் அவர் அணிக்கு மீண்டும் திரும்பியதற்கு அவருக்கான கிரெடிட்டை கொடுத்தாக வேண்டும். நான் அவருடன் தொடர்பில் இருந்ததால் அவருடைய கடின உழைப்பை பார்த்திருக்கிறேன்.
எனவே அவருக்கு வாழ்த்துக்கள். அவர் ஒரு மிகச் சிறந்த மேட்ச் வின்னர். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் எப்படிப்பட்ட பிளேயர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். குறிப்பாக வெளிநாடுகளில் அவர் எந்த அளவு சிறப்பாக விளையாடக் கூடியவர் என்பதையும் அறிவோம். அவர் இந்திய டெஸ்ட்களில் விளையாடிய போதும் சதம் அடித்திருக்கிறார். மேலும் முக்கிய டெஸ்ட் போட்டிகளிலும் அற்புதமாக விளையாடி உள்ளார்.எனக்கு தெரிந்தவரை அவருடைய மிகப்பெரிய முன்னேற்றம் கீப்பிங்கில்தான். 2021ஆம் ஆண்டு இங்கிலாந்து தொடருக்கு பிறகு அவருடைய கீப்பிங்கில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க:நாதன் லயனின் பேச்சுக்கு.. அஸ்வின் உடனே பதிலடி கொடுக்க வேண்டும் – பாகிஸ்தான் பசித் அலி விமர்சனம்
மேலும் அவர் ஒரு இடது கை பேட்ஸ்மேன் என்பது இந்திய அணிக்கு பெரிய பிளஸ். ஒவ்வொரு வீரரும் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது என்பது மிகப்பெரிய பணி. அதனால் பண்ட் இந்த தொடரில் களமிறங்குவது குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அவர் துலீப் டிராபியில் நன்றாக விளையாடினார். அவர் கீப்பராகவும் பேட்ஸ்மேனாகவும் அவரது பணிச்சுமையை நிர்ணயிக்க வேண்டியது அவசியம். வீரர்கள் களத்தில் எப்படி உணர்கிறார்கள் என்பதை பார்ப்பதும் முக்கியம். எனவே ஜூரேலும் முக்கிய பங்கு வகிப்பார்” என்று கூறி இருக்கிறார்.