ஐசிசி 9வது டி20 உலக கோப்பைத் தொடர் எதிர்பார்த்ததை விட மிகவும் சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது. தற்பொழுது மூன்று பெரிய அணிகள் முதல் சுற்று உடன் டி20 உலகக்கோப்பை தொடரை விட்டு வெளியேற வாய்ப்புகள் ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதில் இரண்டு பிரச்சினைகள் உருவாகி இருக்கிறது.
தற்போது பி பிரிவில் ஆஸ்திரேலியா அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. இந்த நிலையில் இங்கிலாந்து அடுத்த இரண்டு போட்டிகளையும் வென்று, ஸ்காட்லாந்து ஆஸ்திரேலியா அணியிடம் படுதோல்வி அடைந்தால் மட்டுமே, இங்கிலாந்து அணியால் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்கின்ற சூழ்நிலை இருக்கிறது.
இதைப்போலவே சி பிரிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. 99 சதவீதம் நியூசிலாந்து அணி டி20 உலகக் கோப்பை தொடரை விட்டு வெளியேறி விட்டது என்று கூறலாம். ஆப்கானிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பப்புவா நியூ கினியா அணிகளிடம் படுதோல்வி அடைந்தால் மட்டுமே நியூசிலாந்துக்கு ஒரு சிறிய வாய்ப்பு இருக்கிறது.
மேலும் ஏ பிரிவில் இந்திய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறி விட்டது. பாகிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற வேண்டுமென்றால் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஓரளவுக்கு நல்ல ரன் ரேட்டில் வெற்றி பெற வேண்டும். இதே போல அயர்லாந்து அணிக்கு எதிராக அமெரிக்க அணி ஒரு குறிப்பிட்ட ரன் ரேட்டில் தோல்வியடைய வேண்டும்.
தற்பொழுது பேட்டிங் செய்வதற்கு கடினமான நியூயார்க் நாசா மைதானத்தில் கடைசிப் போட்டி முடிவடைந்து விட்டது. எனவே அமெரிக்காவில் அடுத்து நடைபெறும் போட்டிகள் எல்லாமே சென்ட்ரல் ப்ரோவர்ட் ரீஜினல் பார்க் ஸ்டேடியம், டர்ஃப் மைதானம், லாடர்ஹில், புளோரிடாவில் நடக்க இருக்கிறது. ஆனால் இங்கு தொடர்ந்து கடுமையான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இலங்கை நேபாள் போட்டி ரத்த ஆனது.
இதையும் படிங்க : நாங்க ஒன்னும் தெரு கிரிக்கெட் டீம் கிடையாது.. ரசிகர்களே இவங்கள மாதிரி நடக்காதிங்க – ஷாகின் அப்ரிடி வருத்தம்
இந்த நிலையில் புளோரிடாவில் அயர்லாந்து பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி மழையால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். மேலும் பாகிஸ்தான் வெல்ல வேண்டும். இதே போல இதே மைதானத்தில் நடைபெறும் அயர்லாந்து அமெரிக்கா அணிகளுக்கு இடையே ஆன போட்டியும் நடைபெற வேண்டும். ஒருவேளை இந்த போட்டியில் மழையால் ரத்து ஆனால் கூட, ஐந்து புள்ளிகள் உடன் அடுத்த சுற்றுக்கு அமெரிக்கா நுழைந்து விடும். பாகிஸ்தான் வெளியேறிவிடும். தற்பொழுது பாகிஸ்தான் அணிக்கு மழையின் காரணமாக புது தலைவலி உருவாகி இருக்கிறது.