பாகிஸ்தான அணி உள்நாட்டில் 16 மாதங்கள் கழித்து டெஸ்ட் தொடரில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாடுகிறது. இது இரண்டு அணிகள் மோதிக்கொள்ளும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டி இன்று ராவல்பிண்டி மைதானத்தில் தொடங்கியது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் முதலில் பந்து வீசுவது என அறிவித்தது. பாகிஸ்தான அணி உள்நாட்டில் நீண்ட காலம் கழித்து வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை அமைத்தது. மேலும் அணியில் பிரதான சுழல் பந்துவீச்சாளர் என்று யாரும் இடம் பெறவில்லை.
பாகிஸ்தான் அணியின் ஆரம்ப சரிவு
பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் புதிய தலைமை பயிற்சியாளர் ஜேசன் கில்லஸ்பியின் புதிய அணுகு முறையில் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது. ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக பாகிஸ்தான் அணி முதல் 16 ரன்களுக்கு மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்தது.
பாகிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர் அப்துல்லா ஷபிக் 2(14), கேப்டன் ஷான் மசூத் 6(11), முன்னாள் கேப்டன் பாபர் அசாம் 0(2) ரன்கள் என அடுத்தடுத்து வெளியேறினார்கள். இதன் காரணமாக உள்நாட்டில் அதுவும் பங்களாதேஷ் மாதிரியான அணியிடம் பாகிஸ்தான் அணி சிக்கியது அந்த அணி நிர்வாகத்திற்கு தலைவலியாக திடீரென உருவெடுத்தது.
பாகிஸ்தான் அணியை காப்பாற்றிய ஜோடி
இந்த நிலையில் இளம் துவக்க ஆட்டக்காரர் சையும் அயூப் மற்றும் புதிய துணை கேப்டன் இளம் வீரர் சவுத் ஷகீல் இருவரும் இணைந்து பொறுப்புடன் விளையாடி அணியை கொஞ்சம் கொஞ்சமாக மீட்க ஆரம்பித்தார்கள். இந்த ஜோடி 139 பந்துகளுக்கு அதிரடியாக 98 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.
நல்ல நிலையை நோக்கி பாகிஸ்தான் அணி முன்னேறிய போது சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்த சையும் அயூப் 98 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 56 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இதையும் படிங்க: சும்மா கிடையாது.. அந்த ஒரு விஷயத்தை செஞ்சு முடிக்க எனக்கு ரெண்டு வருஷம் ஆச்சு – அஸ்வின் சுவாரசிய தகவல்
இதைத்தொடர்ந்து மழையால் பாதிக்கப்பட்ட இன்று முதல் நாள் ஆட்டநேர முடிவில் 41 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு பாகிஸ்தான அணி 158 ரன்கள் எடுத்திருக்கிறது. பாகிஸ்தான் மணிக்கு ஆட்டம் இழக்காமல் துணை கேப்டன் சவுத் ஷகீல் 92 பந்துகளில் 52 ரன்கள், முகமது ரிஸ்வான் 31 பந்தில் 24 ரன்கள் எடுத்து களத்தில் நிற்கிறார்கள். பங்களாதேஷ் தரப்பில் சோரிஃபுல் இஸ்லாம் மற்றும் ஹசன் மக்முத் இருவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.