பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான முகமது ரிஸ்வான் மற்றும் இமாம் உல் ஹக் ஆகிய இருவருக்கும், நாட்டின் தேசிய சைபர் க்ரைம் விசாரணை ஏஜென்சி முறைப்படி நோட்டீஸ் அனுப்பி சம்மன் வழங்கி உள்ளது.
இங்கிலாந்து தொடரின் போது பாகிஸ்தான் அணியின் டிரஸ்ஸிங் ரூம் தகவல்கள் வெளியானது குறித்த விசாரணையில், இரு வீரர்களின் மொபைல் போன்களையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பறிமுதல் செய்து விசாரணை அமைப்பிடம் ஒப்படைத்துள்ளது.
இந்த விவகாரத்தில் மூன்றாவது கிரிக்கெட் வீரர் ஒருவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த சர்ச்சை குறித்து பிசிபி அதிகாரப்பூர்வ கருத்து எதையும் இதுவரை தெரிவிக்கவில்லை.
இந்த விசாரணை குறித்து பிசிபி ஊடக இயக்குனர் ஆமிர் மிர் கூறும்போது “சமீபத்தில் ஊடகங்களில் வெளியான ஒழுக்கமின்மை தொடர்பான செய்திகளைத் தொடர்ந்து, வாரியம் தனியாக உள்நாட்டு டிசிப்ளினரி விசாரணையைத் தொடங்கி நடத்தி வருகிறது” என்று கூறி இருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர் “இத்தகைய விவகாரங்களை பிசிபி தனது நிலையான விதிகள் மற்றும் நடைமுறைகளின்படியே கையாளும். அனைத்து விதிமுறைகளுக்கும் உட்பட்டு, சம்பந்தப்பட்ட நபர்களின் கருத்துகளையும் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறி முடித்துள்ளார்.