இந்திய வீரர் ஜெய்ஸ்வாலின் உலக சாதனை ஒன்றை மும்பை மாநில அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் ஆயுஸ் மத்ரே 117 பந்துகளில் அதிரடியாக விளையாடி உடைத்திருக்கிறார்.
இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி சில வாரங்களாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நாகலாந்து அணிக்கு எதிராக குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை இளம் தொடக்க ஆட்டக்காரர் உலகச் சாதனை படைத்திருக்கிறார்.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நாகாலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பை மாநில அணியின் ஒரு தொடக்க ஆட்டக்காரரான அன்கிரிஸ் ரகுவன்சி 66 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இன்னொரு இளம் தொடக்க இடது கை ஆட்டக்காரர் ஆயுஸ் மத்ரே அதிரடியாக விளையாடி 117 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்ஸர்கள் உடன் 181 ரன்கள் குவித்து மிரட்டினார். 50 ஓவர்களில் மும்பை அணி 7 விக்கெட் இழப்புக்கு 403 ரன்கள் குவித்தது.
இந்த போட்டியில் ஆயுஸ் மத்ரே 17 வயது 168 நாட்களில் லிஸ்ட் ஏ போட்டியில் அதிரடியாக சதம் அடித்ததின் மூலமாக, குறைந்த வயதில் 150 ரன்களுக்கு மேல் லிஸ்ட் ஏ போட்டியில் அடித்த வீரர் என்ற உலக சாதனையை படைத்தார். இதற்கு முன்பாக 2019ஆம் ஆண்டு ஜெய்ஸ்வால் தன்னுடைய 17 வயது 291 நாட்களில் குறைந்த வயதில் 150 ரன்கள் தாண்டி ஜார்க்கண்ட் அணிக்கு எதிராக உலகச் சாதனை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து விளையாடிய நாகலாந்து அணிக்கு ருபேரோ 110 பந்துகளில் 53 ரன்கள், சுஜித் 97 பந்தில் 104 ரன்கள் எடுத்தார்கள். அந்த அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை அணிக்கு பந்துவீச்சில் சர்துல் தாக்கூர் மூன்று விக்கெட் கைப்பற்றினார். மும்பை அணி 189 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதையும் படிங்க : இப்பவும் சொல்றேன்.. நிதிஷ் குமார் சுந்தர் செலக்சன் தப்புதான்.. காரணம் இதுதான் – மஞ்ச்ரேக்கர் விமர்சனம்
நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக ஆயுஸ் மத்ரேயை சிஎஸ்கே அணி நிர்வாகம் ட்ரையலுக்காக அழைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் மெகா ஏலத்தில் அவரை சிஎஸ்கே அணி நிர்வாகம் வாங்கவில்லை. ஆனால் இந்த குறிப்பிட்ட வீரரை தோனி விரும்பியதாகவும் அதன் பெயரிலேயே அவர் ட்ரையலுக்கு அழைக்கப்பட்டதாகவும் அப்போது செய்திகள் வந்தது குறிப்பிடத்தக்கது!