ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய கேஎல் ராகுல் 77 ரன்களையும், கலீல் அஹ்மத் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.
மோசமான சாதனை
பின்னர் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்திருக்கிறது. 11வது ஓவரிலேயே களமிறங்கிய தோனி கடைசி வரை களத்தில் இருந்து 26 பந்துகளில் 30 ரன்களையும், விஜய் சங்கர் 54 பந்துகளில் 69 ரன்களையும் சேர்த்தார். சிஎஸ்கே அணியின் தோல்விக்கு தோனி முக்கிய காரணமாக அமைந்தார்.
ஏனென்றால் கடைசி 5 ஓவர்களில் இலக்கை நோக்கி செல்வதற்கான அதிரடி ஆட்டத்தை கூட தோனி வெளிப்படுத்தவில்லை. ரன் ரேட் சரிவதை கட்டுப்படுத்துவதில் மட்டுமே தோனி குறிப்பாக இருந்தார். ஆனால் மற்ற அணிகளாக இருந்திருந்தால், கடைசி 4 ஓவர்களில் 74 ரன்களை சேர்க்க கூடுதலாக முயற்சி செய்திருப்பார்கள்.
முதல் பவுண்டரி
அதேபோல் இந்த போட்டியில் தோனி மோசமான சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். இந்த இன்னிங்ஸில் தோனி ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரியை மட்டும் விளாசி இருந்தார். ஆனால் அவரின் முதல் பவுண்டரி 19வது பந்தில் தான் வந்திருக்கிறது. இந்த சீசனில் பேட்டிங் செய்த வீரர்களில் முதல் பவுண்டரியை அடிக்க அதிக பந்துகளை எடுத்து கொண்ட வீரராக தோனி பெயர் எடுத்துள்ளார்.
இப்படியொரு மோசமான சாதனையால் தோனி ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர். 43 வயதை எட்டியுள்ள தோனிக்கு இதுவே கடைசி சீசனாக பார்க்கப்படுகிறது. அதனால் இந்த சீசனில் உத்வேகமாக தோனி விளையாடுவார் என்று எதிர்பார்த்தால், ஒருநாள் கிரிக்கெட் போட்டியை போல் ஆடி அவரது ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை பெற்று வருகிறார்.