இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளராக திகழ்ந்து கொண்டிருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மாண்டி பனேசர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆங்கிலேய வீரராக இருந்திருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும் என்று சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
ஒரு நாள் மற்றும் டி20யை காட்டிலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முக்கியத்துவம் கொண்ட வீரராகக் கருதப்படும் ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்டில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தி இருக்கிறார். இதுவரை 101 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் மொத்தமாக 522 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். பந்துவீச்சில் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் சிறப்பாக விளையாடி டெஸ்டில் இதுவரை 6 சதங்களை குவித்திருக்கிறார்.
தற்போது நடைபெற்று வரும் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி பேட்டிங்கில் 113 ரன்கள் குவித்தது மட்டுமல்லாமல், பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். 38 வயதான போதிலும் தற்போது இந்திய அணியில் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்கும் நிலையில் அஸ்வின் இங்கிலாந்து வீரராக இருந்திருந்தால் அவரை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஓய்வு பெற வற்புறுத்தி இருக்கும் என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் மாண்டி பனேசர் கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “இங்கிலாந்து அதிகமான பரிசோதனையை முயற்சியை மேற்கொள்கிறது. தற்போது ரவிச்சந்திரன் அஸ்வின் ஆங்கிலேய வீரராக இருந்திருந்தால் விளையாடும் திறன் கொண்ட இளம் வீரர்களை உள்ளே கொண்டு வர வேண்டும் என்பதற்காக அஷ்வினை ஓய்வு பெறச் சொல்லி இருப்பார்கள். இங்கிலாந்து அதிகமாக பரிசோதனை செய்கிறது என்று நினைக்கிறேன். பரிசோதனை செய்ய இங்கிலாந்து விரும்புகிறது” என்று கூறியிருக்கிறார்.
தற்போது வயதாகி வந்தாலும் ரவிச்சந்திரன் அஸ்வின் முன்பை விட பேட்டிங்கில் அதிக தீவிரம் காட்டி வருகிறார். ஐபிஎல் தொடரில் இந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக குறிப்பிடத்தக்க பங்களிப்பை வெளிப்படுத்திய நிலையில் டிஎன்பிஎல் தொடரில் திண்டுக்கல் அணிக்காக விளையாடி அந்த அணி டிராபியை வெல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
இதையும் படிங்க:பஞ்சாயத்த முடிக்கலாம் வாங்க.. தோனி ரிஷப் பண்ட் யார் டெஸ்ட் பெஸ்ட் விக்கெட் கீப்பர்? – ஆகாஷ் சோப்ரா பதில்
இந்த சூழ்நிலையில் தற்போது சென்னையில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இக்கட்டான சூழ்நிலையில் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி சதம் அடித்தது மட்டுமல்லாமல் பந்து வீச்சிலும் கலக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இன்னும் சில ஆண்டுகள் அஸ்வின் இந்திய அணிக்காக பல்வேறு சாதனைகளை நிகழ்த்தப் போகிறார் என்று எதிர்பார்க்கலாம்.