ஐபிஎல் தொடரில் தோனி, விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருக்கும் அணிக்கு தாங்கள் மேனேஜர்களாக இருந்தால் என்ன செய்வோம் என்பது குறித்து இங்கிலாந்தின் மைக்கேல் வாகன் மற்றும் ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட் இருவரும் கருத்து கூறியிருக்கிறார்கள்.
ஐபிஎல் தொடர் ஆரம்பித்த காலத்தில் இருந்து 17 வருடங்களாக இந்திய கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டார்களாக விளங்கும் தோனி, விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா மூவரும் விளையாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த மூவரில் இருவர் கூட ஒரே அணியில் சேர்ந்து விளையாடியது கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடரின் மூன்று முகங்கள்
ஐபிஎல் தொடரில் மிகப் பெரிய சந்தை மதிப்பை கொண்டிருக்கும் மூன்று அணிகளை வரிசைப்படுத்தினால் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மூன்றும் இருக்கின்றன. முதல் இரண்டு அணிகளும் கோப்பையை வென்று முதல் இரண்டு இடத்தில் இருப்பது ஆச்சரியம் இல்லை. ஆனால் கோப்பையை வெல்லாத விராட் கோலியின் அணி மூன்றாவது இடத்தில் இருப்பது தான் பெரிய ஆச்சரியம்.
ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை அணிகளுக்கு சந்தை மதிப்பு வெற்றியின் மூலமாக மட்டும் கிடைப்பது கிடையாது. அந்த அணியில் இருக்கும் நட்சத்திர வீரரை பின்தொடரும் ரசிகர்களாலும் கிடைக்கிறது. இதன் காரணமாகவே விராட் கோலி மூலம் ஆர்சிபி அணிக்கு பெரிய அளவில் ரசிகர் பட்டாளமும் அதன் மூலம் அந்த அணிக்கு பெரிய சந்தை மதிப்பும் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
விராட் கோலியை விற்று விடுவேன்
இந்த நிலையில் இந்த மூவரும் இருக்கும் அணிக்கு தான் கேப்டனாக வந்தால் என்ன செய்வேன்? என மைக்கேல் வாகன் கூறும் பொழுது “தோனி ஐபிஎல் தொடரில் சிறந்த கேப்டனாக இருந்திருக்கிறார். மேலும் அவரும் ரோகித் சர்மாவும் இணைந்து பத்துக்கும் மேற்பட்ட கோப்பைகளை வென்று இருக்கிறார்கள். எனவே நிச்சயமாக இந்த இருவரையும் என்னுடைய அணியில் வைத்துக் கொள்வேன்”
“இவர்கள் இருவரையும் வைத்துக்கொள்ளும் வேளையில் நான் விராட் கோலியை விட்டு விடுவேன். ஏனென்றால் அவர் ஐபிஎல் தொடரில் ஒரு முறை கூட கோப்பையை வெல்லவில்லை. மேலும் நான் அவரை விற்பதால் நிறைய பணம் கிடைக்கும். அந்த பணத்தைக் கொண்டு நான் அணியை கட்டமைக்க வேறு விஷயங்களை செய்வேன்” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: இப்ப இந்திய அணியில் இந்த 4 பேரும் ஃபீல்டிங்ல கலக்குனாங்க.. அதுல இவர் பெஸ்ட் – கோச் டி திலீப் பேட்டி
இதுகுறித்து ஆடம் கில்கிறிஸ்ட் உரையாடலில் கூறும் பொழுது “ஒரு மேனேஜரின் பார்வையில் இருந்து பார்க்கும் பொழுது வாகன் சொல்கின்ற கருத்து மிக சரியானது. விராட் கோலியை விற்றுவிட்டு பெரிய பணம் வரும் அதில் நாம் அணியை உருவாக்கலாம்” என்று அதை ஆமோதித்திருக்கிறார்.