இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மஹாம்ப்ரே தேசிய கிரிக்கெட் அகாடமி எடுத்துள்ள ஒரு முக்கிய முடிவு குறித்து தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார்.
அடுத்த மாதம் செப்டம்பர் 5ஆம் தேதி முதல் துலீப் டிராபி ஆரம்பிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் உள்நாட்டு சீசன் ஆரம்பத்திற்கான தொடராக இந்த தொடர் இருக்கிறது. இதில் நான்கு அணிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்த நான்கு அணிகளிலும் விளையாட தயாராக இல்லை என்று கூறி அதிவேக பந்துவீச்சாளர் மயங்க் யாதவை விளையாட வைக்கவில்லை.
தவறான முடிவெடுத்த என்சிஏ
மயங்க் யாதவ் காயத்திலிருந்து குணமடைந்து விட்ட போதும், அவரை தயாராகவில்லை என்று கூறி உள்நாட்டு தொடரில் விளையாடாமல் வைப்பதில் தனக்கு உடன்பாடு இல்லை என முன்னாள் இந்திய பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மஹாம்ப்ரே கூறியிருக்கிறார்.
மேலும் உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடும் பொழுதுதான் சிறந்த கட்டுப்பாடு மற்றும் உடல்ரீதியான மனரீதியான பரிசோதனைகள் நடைபெற்று சிறப்பான முறையில் தயாராக முடியும் என்று அவர் கூறியிருக்கிறார்.
மயங்க் யாதவின் அந்தவொரு பந்து போதும்
இதுகுறித்து பராஸ் மஹாம்ப்ரே கூறும் பொழுது ” மயங்க் யாதவ் செய்த ஒரு டிஸ்மிஸ் அவரைப் பற்றி எல்லாவற்றையும் சொல்கிறது. கிரீன் விக்கெட்டை அவர் கைப்பற்றிய விதத்தில் என்ன மாதிரியான ஒரு பவுலர் என என்னை சொல்ல வைத்தார். கேமரூன் கிரீன் நல்ல பவுன்ஸ் விக்கெட்டில் விளையாடி பழக்கப்பட்டவர்.
ஆனால் அவர் அவுட் ஆன பொழுது அவர் மயங்க் யாதவ் பந்துவீச்சில் பயந்து அவுட் ஆனார் என்பது எனக்கு தெரிந்தது. அப்பொழுது அவர் கிரீசில் நன்றாக சிக்கிக் கொண்டார். ஆனால் அதற்கு முன் மயங்க் யாதவ் வீசிய இரண்டு பந்துகள் அவர் யார்? என்பதை நமக்கு சொல்கிறது.
அவர் தயாராக இல்லை அதனால் விளையாட முடியாதுஎன்று சொல்வதை என்னால் ஏற்க முடியாது. இது பந்து வீசுவதற்கு சரியான வயது. ஒரு பந்துவீச்சாளர் எவ்வளவு பந்து வீச வேண்டும் அவர் எப்பொழுது காயம் அடைவார் என எந்த வரையரையும் வைக்க முடியாது. அதிகப்படியான போட்டிகளில் விளையாடும் பொழுது தான் நல்ல கண்ட்ரோல் கிடைக்கும். உடல் மற்றும் மன ரீதியாக சோதிக்கப்படுவதின் மூலமாக அனுபவம் கிடைக்கும். அவர் முதல் தர கிரிக்கெட்டில் விளையாட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.