இந்திய அணி முதல்முறையாக 1983 ஆம் ஆண்டு ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை கைப்பற்றிய போது அந்த அணிகள் இடம்பெற்று விளையாடிய மதன் லால் ரோகித் சர்மா இடத்தில் புதிய டெஸ்ட் கேப்டனாக யார் தேர்வு செய்யப்பட வேண்டும்? என்பது குறித்து பேசி இருக்கிறார்.
இந்திய டெஸ்ட் அணி அடுத்த மாதம் ஜூன் 20ஆம் தேதி இங்கிலாந்து சென்று அந்த அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. தற்போது இந்த தொடருக்கு முன்பாக இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனை தேர்வு செய்ய வேண்டிய சூழ்நிலை ரோகித் சர்மாவின் ஓய்வால் ஏற்பட்டிருக்கிறது.
கேப்டன் பதவிக்கான போட்டிகள்
தற்போது இந்திய டெஸ்ட் கேப்டன் பதவிக்கு சீனியர் வீரர்களில் விராட் கோலி கேஎல்.ராகுல், பும்ரா மற்றும் ரிசப் பண்ட் என 4 பேர் போட்டியில் இருக்கிறார்கள். இதில் விராட் கோலியை பிசிசிஐ ஏற்கனவே நிராகரித்து விட்டதாக செய்திகள் கூறுகிறது. மேலும் பும்ரா காயமடைய கூடியவராக இருக்கிறார் என்பதால் அவருக்கு துணை கேப்டன் பதவியை தர விரும்பவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் இளம் வீரர்களில் கேப்டன் பதவிக்கு போட்டியிடக் கூடியவராக கில் மட்டுமே இருக்கிறார். மேலும் இந்திய கிரிக்கெட் வாரியமும் கில்லை புதிய கேப்டனாக கொண்டு வரவே பெரிதும் விரும்புவதாக கூறப்படுகிறது. இதன்மூலம் நீண்ட வருடங்களுக்கு இந்திய அணியின் கேப்டனாக அவரால் தொடர முடியும் என்று நம்பப்படுகிறது.
மதன் லால் கோரிக்கை
இந்த நிலையில் இது குறித்து பேசி இருக்கும் மதன் லால் கூறும் பொழுது “இந்திய டெஸ்ட் அணியை ரோகித் சர்மா இடத்திலிருந்து வழி நடத்துவதற்கு பும்ரா மிகவும் சரியான வீரராக இருப்பார் என்று நான் நினைக்கிறேன். அவர் உங்களுக்கு கிடைப்பார் என்றால், உடல் தகுதி உடன் இருக்கிறார் என்றால் அவர்தான் உங்களுக்கு கேப்டன் ஆவதற்கு சரியான வீரர். அவர் காயமடையக்கூடிய வாய்ப்பில் இருந்தாலுமே அவரை தான் நீங்கள் கேப்டனாக கொண்டு வர வேண்டும்”
இதையும் படிங்க : கேப்டன் பதவி.. மீண்டும் விராட் கம்பீர் பிரச்சனை.. கோலி ஓய்வுக்கான பின்னணி காரணம் – வெளியான தகவல்கள்
“ரோகித் சர்மா போன்ற ஒரு பெரிய வீரரை நீங்கள் அணிக்குள் கொண்டு வருகிறீர்கள் என்றால் முதலில் நீங்கள் அவரை தான் விளையாட வைக்க வேண்டும். யாருக்குமே அந்த அணியில் முதலில் இடம் கொடுக்க முடியாது. அவர் பார்ம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் விளையாடுவார். தற்போது அவர் ஓய்வு பெற்றிருக்கிறார். அதற்கு என்ன காரணம் இருந்தாலும் அவருடைய தனிப்பட்ட முடிவை நாம் மதிக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.