இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில் தற்போது இரண்டு அணி வீரர்களும் மிக தீவிரமான பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் வலை பயிற்சி பந்துவீச்சாளராக பவுலிங் செய்து வரும் லக்னோ அணியைச் சேர்ந்த ஜம்ஷெய்த் ஆலம் விராட் கோலி குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்த ஆண்டில் தனது முதல் டெஸ்ட் தொடரை விளையாடி வரும் விராட் கோலி சொந்த மண்ணில் வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்று வரும் தொடரில் சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் மிகக் குறைந்த ரன்களில் வெளியேறினார். அதிலும் இரண்டு இன்னிங்ஸிலும் இவர் ஆட்டம் இழந்த விதம் பார்வையாளர்களிடையே கவனத்தை ஏற்படுத்தியது.
முதல் இன்னிங்ஸில் வெளியே சென்ற பந்தை அடிக்கச் சென்ற விராட் கோலி ஸ்லிப் திசையில் கேட்ச் ஆகி வெளியேறினார். இரண்டாவது இன்னிங்ஸில் பந்து பேட்டில் பட்டதையும் உணராமல் எல்பிடபில்யூ முறையில் வெளியேறினார். இதனால் விராட் கோலி அடுத்த போட்டிக்கு தயாராகும் விதமாக மிகத் தீவிரமான வலைப் பயிற்சியில் நேரத்தை செலவிட்டு வரும் நிலையில் லக்னோவைச் சேர்ந்த வலைப் பந்துவீச்சாளர் ஜம்ஷெய்த் ஆலம் தான் பந்து வீசிய விதம் குறித்து விராட் கோலி பாராட்டியதாகவும் கௌதம் கம்பீர் தன்னிடம் பேசிய வார்த்தைகள் குறித்தும் கூறி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “நான் வலையில் பந்து வீசுவதை பார்த்த விராட் கோலி என்னை வெகுவாக பாராட்டினார். மேலும் நான் விளையாடும் ஆட்ட முறை குறித்தும் கேட்டறிந்தார். நான் மணிக்கு 135 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசினாலும் விராட் கோலி சார் வெளியே செல்லும் பந்துகளை எதிர்கொள்வதற்கு சிரமப்பட்டார். மேலும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ரஞ்சிக்கோப்பையில் விளையாடி இருக்கிறீர்களா எனவும் கேட்டார்.
அவர்களது விசாரணைகள் எனக்கு நம்பிக்கையை அதிகப்படுத்தி இருக்கிறது” என்று கூறி இருக்கிறார். தற்போது இந்திய அணியின் துணை பயிற்சியாளராக விளங்கிக் கொண்டிருக்கும் அபிஷேக் நாயரின் கண்டுபிடிப்பால் தற்போது இந்திய அணிக்கு வலைகளில் இவர் பந்துவீசி கொண்டிருக்கிறார். இதற்கு முன்னதாக ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக நெட் பௌலராக செயல்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:டி20 உட்பட.. நாளை ஒரே நாளில் 4 சர்வதேச போட்டிகள்.. தொடங்கும் நேரங்கள் மற்றும் எந்த சேனலில் பார்க்கலாம்.?
மேலும் நாளை நடைபெற உள்ள போட்டியில் முன்னணி பந்துவீச்சாளர் பும்ராவிற்கு ஓய்வு கொடுக்கப்பட்டு குல்தீப் யாதவ் அடுத்த போட்டியில் களமிறங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.