நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திய அணி தற்போது வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தனது சொந்த மண்ணில் விளையாட இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் இந்த இரண்டு போட்டிகளை பார்ப்பதற்கான தொலைக்காட்சி உரிமம் உள்ளிட்ட தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒரு நாள் தொடர்களில் விளையாடியது. டி20 உலக கோப்பைக்கு பிறகு விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற சீனியர் வீரர்கள் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் மூலம் இந்திய அணிக்கு திரும்பினர். கௌதம் கம்பீர் புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்று இருந்த நிலையில் பெரிய எதிர்பார்ப்புகளோடு களம் இறங்கிய இந்திய அணி ஒரு நாள் தொடரில் தோல்வியடைந்தது.
இந்த சூழ்நிலையில் சுமார் 45 நாட்கள் ஓய்வுக்கு பிறகு வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி சொந்த மண்ணில் விளையாட இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக புள்ளிகளைப் பெற இந்தத் தொடர் இந்திய அணிக்கு மிகவும் அவசியமாக இருக்கும் நிலையில் இந்த இரண்டு போட்டிகளையும் வெற்றி பெற இந்திய அணி மிகத் தீவிரமாக முயற்சிக்கும். இருப்பினும் வங்கதேச அணியும் சமீபத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்று பெரிய நம்பிக்கையோடு களமிறங்க உள்ளது.
இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 19ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் காலை 9:30 மணிக்கு தொடங்க உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகிற 27ஆம் தேதி கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த இரண்டு போட்டிகளையும் ஸ்போர்ட்ஸ் 18 சேனல் மூலமாக இந்திய ரசிகர்கள் இலவசமாக தொலைக்காட்சிகளில் கண்டு ரசிக்கலாம்.
அதே நேரம் தொலைக்காட்சியில் மட்டுமல்லாமல் இணையதளத்தில் ஜியோ சினிமா ஆப் மூலம் ரசிகர்களுக்கு இலவசமாக நேரடியாக லைவ் ஸ்ட்ரீமிங் வழங்கப்படுகிறது. எனவே இந்த இரண்டு தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி ரசிகர்கள் இந்த போட்டித் தொடர்களை நேரடியாக கண்டு களிக்கலாம்.
இதையும் படிங்க:விராட் ரோகித் செய்யல.. ஆனா இளம் வீரர்களுக்கு சுவரா இருக்கிறது அவர்தான் – ஆகாஷ் சோப்ரா கருத்து
இந்தத் தொடருக்கு முன்னணி வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா திரும்புவது மட்டும் இல்லாமல் கேஎல் ராகுல் சமீபத்தில் காயமடைந்து வெளியேறிய ரிஷப் பண்ட் மற்றும் இந்தியாவின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா ஆகியோரும் இந்தத் தொடரில் கலந்து கொள்ள இருப்பது ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.