இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் கேஎல் ராகுல் சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரின் மூலம் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பினார். தற்போது நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் இவரது பெயர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சில வருடங்களுக்கு முன்னர் இந்திய அணியில் தனக்கு ஏற்பட்ட நிகழ்வு குறித்து கேஎல் ராகுல் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
2019ம் ஆண்டில் இந்திய அணியின் வளரும் நட்சத்திரங்களாக ஜொலித்துக் கொண்டிருந்த கேஎல் ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் ‘காபி வித் கரண்’ என்னும் ஹிந்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பெரிதாக அனுபவம் இல்லாத வயதில் சில சர்ச்சையான கருத்துக்களை கூறி விமர்சனங்களை சந்தித்த நிலையில் அப்போது நடைபெற இருந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் கலந்து கொள்ளாமல் கேஎல் ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரையும் இந்திய அணி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது.
அந்த சஸ்பெண்ட் சில நாட்கள்தான் என்றாலும் அது தன்னை முற்றிலும் மாற்றியதாக கேஎல் ராகுல் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தனது கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். மேலும் தான் மென்மையான சுபாவம் கொண்டவனாகவே வளர்ந்தேன் என்றும், பள்ளியில் கூட என்னை எவ்வாறு யாரும் தண்டித்தது இல்லை என்று கூறி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “அந்த சமயத்தில் நான் நன்றாகவே ட்ரோல் செய்யப்பட்டேன். ஆனால் அதற்காக நான் கவலைப்பட மாட்டேன் என நினைத்தேன்.நான் அப்போது மிகவும் இளையவன். நான் நிறைய கேலிகளுக்கு உள்ளானேன். நான் நின்றால் கேலி, நடந்தால் கேலி என அனைத்திற்கும் ட்ரோல் செய்யப்பட்டேன். காபி வித் கரண் நிகழ்ச்சியை பற்றி கூறினால் அந்த நேர்காணலில் வேறு ஒரு உலகத்தில் இருந்தேன்.
அது என்னை மாற்றியது, முற்றிலுமாக என்னை மாற்றியது. நான் மிகவும் எளிய மனம் கொண்ட மனிதனாக வளர்ந்தேன். அப்போது நான் இந்திய அணிக்காக விளையாடியதால் நிறைய தன்னம்பிக்கை பெற்றேன். நான் 100 பேர் கொண்ட அறையில் இருந்ததை மக்கள் அறிவார்கள். அந்த நேர்காணல் என்னை மிகவும் காயப்படுத்தியதால் நான் இப்போது அது போன்ற எதையும் செய்வதில்லை.
இதையும் படிங்க:ஒரு சர்வதேச அணி இலங்கை இப்படி செய்யலாமா.. இதை எப்படி மறந்திங்க?.. கோபமா வருது – மார்க் புட்சர் விமர்சனம்
அணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டேன். நான் பள்ளிகளில் படித்த போது கூட எந்த விதமான தண்டனையோ அல்லது இடை நீக்கமும் செய்யப்படவில்லை. அணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதை எப்படி கையாள்வது என்று தெரியவில்லை. நான் பள்ளிகளில் குறும்பு செய்தாலும் என்னை பள்ளியிலிருந்து நீக்கவோ அல்லது எனது பெற்றோரை வரவழைக்கவோ என எதுவும் செய்ததில்லை ” என்று கே எல் ராகுல் தனது மனதில் ஏற்பட்ட தாக்கத்தை கூறி இருக்கிறார்.