தற்போது இங்கிலாந்து இலங்கை அணிகள் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் மான்செஸ்டர் ஓல்ட் டிராஃபோர்டு மைதானத்தில் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் மூன்றாவது நாளின் துவக்கத்தில் இலங்கை அணி ஞாபக மறதியாய் செய்த ஒரு தவறை ஏற்றுக் கொள்ளவே முடியாது என இங்கிலாந்து முன்னாள் வீரர் மார்க் புட்சர் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.
முதல் டெஸ்ட் இரண்டாவது நாள்
இலங்கை அணி இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து 236 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. 113 ரண்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இலங்கை அறிமுக வீரரின் அரை சதத்தின் காரணமாக கௌரவமான ஸ்கோரை எட்டியது.
இந்த நிலையில் முதல் நாளில் விக்கெட் இழப்பில்லாமல் சென்ற இங்கிலாந்து அணி இரண்டாவது நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாவது நாளின் முடிவில் கடைசி ஓவரை இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் அசிதா பெர்னாடோ வீசி இருந்தார்.
இலங்கை அணி செய்த மோசமான தவறு
இந்த நிலையில் மூன்றாவது நாளின் துவக்க ஓவரை மீண்டும் வீச அசிதா பெர்னாடோ வந்தார். இரண்டாவது நாளின் கடைசி ஓவரை அவர் வீசி இருந்த காரணத்தினால், மூன்றாவது நாளில் முதல் ஓவரை அவரால் வீச முடியாது. இதனால் அவர் நிறுத்தப்பட்டு பிரபாத் ஜெயசூர்யா வீசினார். மேலும் வெல்வதற்கு சம வாய்ப்பில் இருந்த இலங்கை அணி மூன்றாவது நாளை திட்டம் குறித்து எதுவுமே யோசிக்காமல் களத்திற்கு வந்தது போல் இருந்தது.
இது குறித்து விமர்சனம் செய்திருக்கும் இங்கிலாந்து முன்னால் வீரர் மார்க் புட்சர் கூறும்பொழுது “தற்போதைய கிரிக்கெட் காலத்தில் ஒரு சர்வதேச கிரிக்கெட் அணி இது குறித்து எப்படி எந்தவித தயாரிப்பும் இல்லாமல் வந்திருக்கும்? என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இது எனக்கு கோபத்தை உண்டாக்குகிறது. எப்படி இதுகுறித்து யோசனை இல்லாமல் இருந்தது என்று புரிந்து கொள்ள முடியவில்லை. தற்போது கேப்டன் மட்டும் இல்லாமல் ஒரு அணிக்கு இது சம்பந்தமாக பல ஊழியர்கள் இருக்கிறார்கள்.
ஒரு நாளின் தொடக்கத்தில் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? என்று தெரியாமல் இருப்பதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. மூன்றாவது நான் இந்த போட்டியில் முக்கியமான நாளாக இருக்கிறது. இலங்கை அணியும் போட்டியில் வெற்றி வாய்ப்பில் இருக்கிறது. மேலும் போட்டியின் இரண்டு நாளிலும் நல்ல முறையில் குணாதிசயத்தை காட்டி விளையாடி இருக்கிறது. இப்படி இருக்கும் பொழுது உங்களுக்கு எப்படி இந்த விஷயம் தெரியாமல் போகும்? இது மைதானத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்குமே தெரிந்த விஷயம்.
இதையும் படிங்க : தென் ஆப்பிரிக்கா வெஸ்ட் இண்டீஸ் டி20.. எப்போது எங்கு பார்க்கலாம்.?.. உலக கோப்பை தோல்விக்கு பின் முதல் போட்டி
மூன்றாவது நாளில் யார் பந்து வீசப் போகிறார்கள்? நாம் என்ன மாதிரியான ஃபீல்டு செட்டப்பை வைக்கப் போகிறோம்? ஜேமி ஸ்மித்தை பேட்டிங்கில் இருந்து வெளியில் வைக்கப் போகிறோமா? அல்லது அவரை அழுத்தத்தில் வைக்கப் போகிறோமா?என்பது போன்றவற்றில் இவர்களின் திட்டம்தான் என்ன? இதுதான் என் மனதில் கேள்வியாக இருந்து கொண்டே இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.