ரோகித் சர்மாகிட்ட இத நான் கட்டாயம் கேட்கணும்.. பெரிய தப்பு பண்ணிட்டு இருக்காரு – கபில்தேவ் விமர்சனம்

0
760
Rohit

இந்திய அணி நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் சுற்றில் நான்கு போட்டிகளையும் அமெரிக்காவில் விளையாடுகிறது. இங்குள்ள ஆடுகளங்கள் வேகப்பந்து வீட்டுக்கு சாதகமாக இருப்பதால் இந்திய அணி நிர்வாகம் புதிய திட்டப்படி பிளேயிங் லெவனை அமைத்திருக்கிறது. இந்த நிலையில் கேப்டன் ரோஹித் சர்மா திட்டத்தில் தவறு செய்வதாக கபில்தேவ் விமர்சனம் செய்திருக்கிறார்.

இந்திய அணி முதல் சுற்றில் அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு செல்வதற்கான பிரகாசமான வாய்ப்பில் இருக்கிறது. மேலும் இன்று நியூயார்க் மைதானத்தில் அமெரிக்க அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்திய அணிக்கு அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டி மிகவும் எளிமையாக அமைந்தது. ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் கடுமையாக இந்திய அணி போராடித்தான் வென்றது. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான சூழ்நிலையில் இந்த இரண்டு போட்டிகளிலும் பும்ரா முதல் இரண்டு ஓவர்களில் பந்து வீச வரவில்லை.

இதுகுறித்து இந்திய லெஜெண்ட் வீரர் கபில்தேவ் கூறும்பொழுது “அடுத்த முறை நான் ரோகித் சர்மாவிடம் சென்று இந்தக் கேள்வியை நிச்சயம் கேட்பேன். ஏனென்றால் அவருடைய சிந்தனை செயல்முறையை தெரிந்து கொள்ள நான் விரும்புகிறேன். நாம் வெளியில் இருந்து நிறைய யூகிக்கலாம். நான் கிரிக்கெட் விளையாடிய அனுபவத்தின் அடிப்படையில் பும்ரா முதல் ஓவரை வீச வேண்டும். அங்கு அவரால் விக்கெட்டை கைப்பற்ற முடியும். மேலும் அவர் மிக தாமதமாக வரும்பொழுது ஆட்டம் கைநழுவி விடும்.

- Advertisement -

பும்ராவால் இவ்வளவு கிரிக்கெட் விளையாட முடியும் என்று நாம் யாரும் நினைக்கவில்லை. பந்துவீச்சில் அவரது ஓட்டம் மற்றும் தோள்களில் ஏற்படும் அழுத்தம் காரணமாக அவரால் முடியாது என்று நினைத்தோம். ஆனால் நாங்கள் நினைத்தது தவறு என்று அவர் நிரூபித்திருக்கிறார்.

இதையும் படிங்க : இங்கிலாந்தை வெளிய அனுப்ப.. ஸ்காட்லாந்து கூட நாங்க இப்படியும் விளையாடலாம் – ஹேசில்வுட் பேச்சு

ரோகித் சர்மா ஆரம்பத்திலிருந்து பாசிட்டிவான எண்ணத்தை வைத்திருப்பது நல்லது. அவர் முதலில் பந்துவீச்சை பும்ராவை வைத்து தொடங்கினால், அவரால் ஒரு ஜோடி விக்கெட்டை கைப்பற்ற முடிந்தால் எதிரணி சிக்கலில் விழும். உடன் பந்து வீசும் பந்துவீச்சாளர்களுக்கும் நல்லதாக அமையும். இது டி20 கிரிக்கெட் சீக்கிரத்தில் விக்கெட் எடுப்பதன் மூலமாகத்தான் அழுத்தம் கொடுக்க முடியும். எனவே ரோகித் சர்மா பாசிட்டிவாக திட்டங்களை தீட்ட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -