பதறிய தினேஷ் கார்த்திக், “ஆட்டம் நம்ம கன்ட்ரோல் தான்.. நான் பாத்துக்றேன்” – மாஸ் ரியாக்சன் கொடுத்த ஹர்திக் பாண்டியா வீடியோ!

0
517

மூன்று பந்துகளில் ஆறு ரன்கள் தேவைப்பட்டபோது ஹர்திக் பாண்டியா கொடுத்த ரியாக்சன் இணையதள உலகை கவர்ந்திருக்கிறது.

ஆசியக் கோப்பை தொடரின் இரண்டாவது போட்டி துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் உலகமே எதிர்பார்த்துக் காத்திருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு அணிகளும் பலப்பரீட்சை மேற்கொண்டன. போட்டியில் டாஸ் மிக முக்கிய பங்கு வகிக்கும் என பலரும் கருதி வந்தநிலையில், டாஸ் வென்ற ரோகித் சர்மா, சரியாக பந்துவீச்சு தேர்வு செய்வதாக அறிவித்தார்.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கே துவக்க வீரர்களாக களம் இறங்கிய முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் இருவரும் நல்ல துவக்கம் அமைத்து கொடுப்பார்கள் என நினைத்தபோது, புவனேஸ்வர் குமார் பந்தில் பாபர் அசாம் 10 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். மறுமுனையில் சற்று நிதானமாக விளையாடி வந்த ரிஸ்வான், அவ்வபோது பவுண்டரி மற்றும் சிக்ஸர்கள் அடிக்க, உள்ளே வந்த வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்து வெளியேறினர். இதனால் பாகிஸ்தான் அணி திணறி வந்தது.

முகமது ரிஸ்வான் 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியில் பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. புவனேஸ்வர் குமார் மற்றும் ஹார்திக் பாண்டியா இருவரும் முறையே 4 விக்கெட்டுகள் மற்றும் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். இந்திய அணிக்கு துவக்க வீரராக களமிறங்கிய கேஎல் ராகுல் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். ரோகித் சர்மா 12 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த விராட் கோலி சற்று நிலைத்து விளையாட, சூர்யா குமார் யாதவ் 18 ரன்கள் அடித்து வெளியேறினார்.

தவறான நேரத்தில் விராட் கோலி 35 ரன்களுக்கு அவுட் ஆனார். இந்திய அணி மிகவும் தடுமாறி வந்தது. அப்போது ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டனர். இந்த ஜோடி ஐந்தாவது விக்கெட்டுக்கு 52 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் இந்திய அணிக்கு ஏழு ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தை எதிர் கொண்ட ஜடேஜா கிளீன் போல்ட் ஆகி ஆட்டம் இழந்தார். இவர் 35 ரன்கள் அடித்து இந்திய அணிக்கு நம்பிக்கை கொடுத்தார். அடுத்ததாக உள்ளே வந்த தினேஷ் கார்த்திக் முதல் பந்தில் ஒரு ரன் எடுத்துக்கொடுக்க, நான்கு பந்துகளுக்கு ஆறு ரன்கள் தேவைப்பட்டது.

- Advertisement -

மூன்றாவது பந்தை அடிக்க முயற்சித்து மிஸ் செய்தார் ஹர்திக் பாண்டியா. அப்போது எதிர் முனையில் நின்று கொண்டிருந்த தினேஷ் கார்த்திக் சற்று பதற்றத்துடன் அறிவுரை கூற, நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கண்களில் செய்கை காட்டினார் ஹர்திக். அதற்கு அடுத்து பந்தை சிக்ஸர் விளாசி, ஸ்டைலாக ஆட்டத்தை முடித்துக் கொடுத்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹார்திக் பாண்டியா, 17 பந்துகளில் 33 ரன்கள் அடித்திருந்தார். பவுலிங்கில் மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தார். இரண்டிலும் அபாரமாக செயல்பட்டதால் ஆட்டநாயகன் விருது இவருக்கு கொடுக்கப்பட்டது.

இருபதாவது ஓவரின் மூன்றாவது பந்தின்போது தினேஷ் கார்த்திக் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரின் இடையே நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.