நேற்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் 231 ரன்கள் துரத்திய சிஎஸ்கே 196 ரன்கள் எடுத்தது. இந்த போட்டியில் சதம் அடித்த கேப்டன் கில்லுக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது. இதற்கு தற்போது இர்ஃபான் பதான் மற்றும் ஹர்பஜன்சிங் மாற்றுக்கருத்தை முன் வைத்திருக்கிறார்கள்.
நடந்து முடிந்த இந்த போட்டியில் கேப்டன் கில் மற்றும் சாய் சுதர்சன் இருவரும் சேர்ந்து மிகச் சிறப்பாக விளையாடி சதங்கள் அடித்து, 210 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தார்கள். மேலும் பந்துவீச்சில் மோகித் சர்மா மற்றும் ரசித் கான் இருவரும் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்கள்.
இதுகுறித்து இர்பான் பதான் கூறும்பொழுது ” என்னை பொறுத்தவரையில் மோகித் சர்மாதான் நேற்றைய ஆட்ட நாயகனாக இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் அது பேட்டிங் செய்வதற்கு சாதகமான ஒரு தட்டையான ஆடுகளம். அது ஹை ஸ்கோரிங் போட்டியாக அமைந்தது. தோல்வி அடைந்த அணியும் 200 ரன்கள் நெருங்கியது. அதில் மோகித் சர்மா மட்டும்தான் பந்து வீச்சில் பல மாற்றங்கள் செய்து வீசினார். மேலும் முக்கியமான மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
டேரில் மிட்சல் மற்றும் மொயின் அலி இருவரும் செட் ஆகி இருந்தார்கள். இந்த இரண்டு பேட்டர்களில் யாராவது நின்று இருந்தால் போட்டியை முடித்து இருப்பார்கள். இல்லை போட்டி இன்னும் நெருங்கி வந்திருக்கும். இதை வைத்துப் பார்க்கையில் மோகித் சர்மா மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். மேலும் அவருடைய பழைய ரிதத்தில் திரும்பி வந்திருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.
இது குறித்து ஹர்பஜன் சிங் கூறும் பொழுது “இந்த தொடரில் நிறைய ரன்கள் எடுக்கப்பட்டதை பார்த்தோம். நேற்றைய போட்டியிலும் அதிக ரன்கள் வந்தது. இப்படி பெரிய ஸ்கோர்கள் வரும் போட்டியில், பந்துவீச்சுதான் மிகப்பெரிய பங்களிப்பாக மாறுகிறது.
இதையும் படிங்க : 6 தோல்விகள்.. பிளே ஆப் போக சிஎஸ்கே செய்ய வேண்டிய 2 அதிரடி மாற்றங்கள்
நீங்கள் 31 ரன்களை விட்டுக் கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளைப் பற்றிய ஆட்டத்தை மாற்றினால் ஆட்டநாயகன் விருதுக்கு தகுதியானவர். அவருடைய ஸ்பெல்தான் ஆட்டத்தை மாற்றியது. அப்படி இல்லாமல் இருந்திருந்தால் போட்டி சென்னைக்கு சாதகமாக மாறி இருக்கக்கூடும். எனவே நான் இர்ஃபான் பதான் கருத்தில் உடன்படுகிறேன்” என்று கூறியிருக்கிறார்.