ஐபிஎல் தொடர் நடக்கும் நாட்கள் அதிகரிப்பு ! சீராக நடத்த புதிய மாற்றங்கள் அறிவிப்பு

0
141
IPL

இன்று இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு மிகப்பெரிய பொருளாதாரத்தை அளிக்கும் அட்சய பாத்திரமாக ஐ.பி.எல் தொடர் மாறியிருக்கிறது. சமீபத்தில் ஐ.பி.எல் ஒளிபரப்பிற்கான உரிமத் தொகையில், உலகின் இரண்டாவது பெரிய விலைக்கு விற்கப்பட்டு சாதனை படைத்தது. அணிகளின் சந்தை மதிப்பும் ஆயிரங்களில் கோடியைத் தாண்டி இருக்கிறது. போலவே அணிகளின் ஆண்டு வருமானமும் மிகப்பெரியது. இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கோ பத்து அணிகளுக்கும் கிடைக்கும் மொத்த வருமானத்திற்கு மேல் கிடைக்கும்!

இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஐ.பி.எல் தொடர் இந்திய கிரிக்கெட் தாண்டி உலகக் கிரிக்கெட்டிலும் பெரிய தாக்கங்களை உருவாக்கி வருகிறது. பல நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் டி20 லீக்குகளை நடத்த காரணமாக இருப்பதோடு, சர்வதேச கிரிக்கெட் நாடுகளின் போட்டி அட்டவணையைத் திருத்தி எழுதுகிறது. ஐ.பி.எல் தொடர் நடக்கும் காலக்கட்டத்தில் ஏனைய கிரிக்கெட் நாடுகள் எந்த சர்வதேச போட்டிகளிலும் விளையாடாதவாறு அட்டவணைகள் அமைக்கப்படுகின்றன. ஐ.பி.எல் தொடரில் கொட்டும் பணத்தால், இந்திய கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி-யிலும் தனது அதிகாரத்தை பரப்பி இருக்கிறது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முடிவுகளை எதிர்க்க ஆள் இருக்கிறது, ஆனால் அந்த எதிர்ப்பில் உறுதியாக இருக்க ஆள் கிடையாது. இதுதான் உலகக் கிரிக்கெட்டில் தற்போதைய நிலை!

- Advertisement -

தற்போது ஐ.பி.எல் தொடர்பான ஒரு மிக முக்கியமான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது அந்த அறிவிப்பிலுள்ள விசயங்கள் அனைத்து கிரிக்கெட் நாடுகளின் வாரியத்தாலும் ஏற்கப்பட்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அது என்னவென்றால்; வரும் ஆண்டுகளில் ஐ.பி.எல் நடக்கும் நாட்களும், போட்டிகளும் அதிகரிக்கப்படும் என்பதே!

ஐ.பி.எல் தொடர் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் கடைசி வாரத்தில் துவங்கி, ஜூன் ஜூன் முதல் வாரம் வரை நடக்கும். அதாவது 15 நாட்கள் அதிகரிக்கப்படுகிறது. அடுத்து 2023-2024 ஆம் ஆண்டுகளில் ஐ.பி.எல் தொடரில் 74 போட்டிகளும், 2025-2026 ஆண்டுகளில் 84 போட்டிகளும், 2027ஆம் ஆண்டில் இருந்து 94 போட்டிகள் நடக்கும் எனவும் தெரிகிறது.

மேலும் இங்கிலாந்தில் நூறு பந்து போட்டிகள் நடக்கும் போதும், ஆஸ்திரேலியா பிக்பாஸ் லீக் நடக்கும் பொழுதும், இங்கிலாந்து, ஆஸ்திரேலிய வீரர்கள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க மாட்டார்கள் என்று முடிவாகியுள்ளதாகவும் தெரிகிறது. கடந்த ஆண்டு இந்திய அணி இங்கிலாந்திற்குச் சுற்றுப்பயணம் செய்து பல நாட்கள் சும்மாவே இருந்தது. அப்பொழுது இங்கிலாந்து வீரர்கள் நூறு பந்து தொடரில் விளையாடிக்கொண்டு இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -