ஐபிஎல் ; காயத்தால் தொடரை இழக்க இருக்கும் சென்னை லக்னோ அணிகளின் இளம் இந்திய வீரர்கள்!

0
1374
Ipl2023

பதினாறாவது ஐபிஎல் சீசன் இந்த மாதம் மார்ச் 31ஆம் தேதி கடைசியில் துவங்கி, மே மாதம் 28ஆம் தேதி வரையில் நடந்து முடிய இருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஒவ்வொரு அணிகளும் தங்களது சொந்த மைதானத்தில் விளையாட இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது!

கடந்த ஐபிஎல் சீசனில் லக்னோ மற்றும் குஜராத் அணிகள் புதிதாக இணைய, 10 அணிகளைக் கொண்டு மும்பையில் வைத்து, 15ஆவது ஐபிஎல் சீசன் நடத்தப்பட்டது. இந்த 15ஆவது ஐபிஎல் சீசன் மெகா ஏலத்தோடு அமைந்தது. புதிய அணிகள் மட்டுமல்லாது ஒவ்வொரு அணியிலும் புதிய வீரர்கள் இடம் பெற்று இருந்தார்கள்.

- Advertisement -

ஒவ்வொரு அணிக்குள்ளும் வந்த புதிய இளம் வீரர்களில் இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களான சென்னை அணியின் முகேஷ் சவுத்ரி மற்றும் லக்னோ அணியின் மோசின் கான் இருவரும் மிகவும் கவனம் ஈர்க்கக் கூடியவர்களாக இருந்தனர்.

இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு இவர்களது அடிப்படை தொகையான 20 இலட்சம் ரூபாய்க்கு இரு அணிகளாலும் வாங்கப்பட்டார்கள். சென்னை அணியில் கடந்த ஆண்டு பிரதான பவர்பிளே வேகப்பந்துவீச்சாளர் தீபக் சகர் காயம் காரணமாக விளையாடாததால், இளம் வீரர் முகேஷ் சவுத்ரி 13 போட்டிகளில் விளையாட வாய்ப்பு பெற்று 16 விக்கட்டுகளை கைப்பற்றினார். அதேபோல் லக்னோ அணிக்காக விளையாடிய இடதுகை வேகப் பந்துவீச்சாளர் மோசின்கான் ஒன்பது போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் அவரது எக்கனாமி 5.97 மட்டுமே!

இந்திய கிரிக்கெட் அணியில் இளம் இடது கை வேகப் பந்துவீச்சாளர்களுக்கான இடம் இப்பொழுது வரை காலியாகவே இருக்கிறது. உலகக்கோப்பை நெருங்கும் வேளையில், இந்த ஐபிஎல் தொடரில் ஒரு இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளரை பார்க்க இந்திய அணி நிர்வாகம் ஆர்வம் கொண்டிருந்தது. அதில் முக்கியமானவர்களாக இந்த இரு இளம் இடதுகை வேகப் பந்துவீச்சாளர்களும் இருந்தார்கள்.

- Advertisement -

தற்பொழுது இவர்கள் இருவருமே காயத்தில் சிக்கி உள்ளதால் இந்த தொடரில் முழுவதுமாக விளையாடுவது கேள்விக்குறியாகி உள்ளது. முகேஷ் சௌத்ரி விளையாடுவது நாளுக்கு நாள் சந்தேகமாகி வருகிறது என்று சென்னை அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்திருக்கிறார். அதேபோல் தோள்பட்டை அறுவை சிகிச்சை செய்திருந்த லக்னோ வீரர் மோசின் கான் அந்த காயத்திலிருந்து இன்னும் முழுமையாக வெளிவந்ததாகத் தெரியவில்லை.

இந்த நிலையில் கிரிக்கெட் இணையதளம் கிரிக்பஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், இவர்கள் இருவரும் காயத்தால் ஐபிஎல் தொடரை இழக்க அதிகப்படியான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்படி நடக்கும் பட்சத்தில் அது இரண்டு அணிகளுக்கு மட்டுமல்லாது இந்திய அணி நிர்வாகத்திற்குமே இழப்பாக அமையும்!