ஐபிஎல் 2024: பிளே ஆஃப் மற்றும் பைனல் நடக்கும் மைதானங்கள் அறிவிப்பு.. சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சி

0
2033
IPL2024

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையே துவங்கிய போட்டியின் மூலமாக 17வது ஐபிஎல் சீசன் துவங்கியது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணி ஆர்சிபி அணியை ஆறு வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இன்று ஐபிஎல் தொடரில் இரண்டு போட்டிகள் நடைபெற்றன. பஞ்சாப் முல்லன்பூர் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் டெல்லி அணியை பஞ்சாப் அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதற்கு அடுத்து கொல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் ஹைதராபாத் அணியை நான்கு ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வீழ்த்தியது.

- Advertisement -

தற்பொழுது இந்தியாவில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் காலம் என்பதால், மார்ச் 22 முதல் ஏப்ரல் ஏழாம் தேதி வரையில் முதல் 15 நாட்களுக்கான ஐபிஎல் அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டது. தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்தவுடன், அதற்கேற்றபடி ஐபிஎல் அட்டவணை வெளியிடப்படும் என்று கூறப்பட்டது. தேர்தல் தேதியும் வெளியாகியிருக்கும் நிலையில், மொத்த அட்டவணையும் வருகின்ற மார்ச் 26 ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிளே ஆப் மற்றும் பைனல் போட்டி நடைபெறும் மைதானங்கள் அறிவிப்பு

இந்த நிலையில் டெல்லி அணி தங்களுடைய கடைசி ஐந்து ஹோம் ஆட்டங்களை விசாகப்பட்டினத்தில் விளையாடாமல், சொந்த மைதானமான டெல்லி அருண் ஜெட்லி மைதானத்திற்கு திரும்புகிறது. அருண் ஜெட்லி மைதானத்தில் மகளிர் கிரிக்கெட் பிளேஆப் மற்றும் இறுதி போட்டிகள் நடைபெற்றதால், ஆடுகளத்தை மீண்டும் உடனே தயாரிப்பது சிரமம் என்பதாலே, டெல்லி போட்டிகள் விசாகப்பட்டினத்துக்கு மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மேலும் பஞ்சாப் கிங்ஸ் அணி தன்னுடைய ஐந்து ஹோம் ஆட்டங்களை பஞ்சாப் முல்லன்பூர் மைதானத்திலும், மீதம் இருக்கின்ற இரண்டு ஆட்டங்களை இமாச்சல் பிரதேஷ் தரம்சாலா மைதானத்திலும் விளையாட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த முறை இந்த இரு அணிகள் மட்டுமே இரண்டு இடங்களில் ஹோம் ஆட்டங்களை விளையாடுகிறது.

மேலும் தற்பொழுது கிடைத்திருக்கும் செய்திகளின்படி நடப்பு 17 வது ஐபிஎல் சீசனின் பிளேஆப் சுற்று மற்றும் பைனல் எங்கு நடைபெறும் என்கின்ற அறிவிப்பு முக்கியமானதாக இருக்கிறது. கடந்த முறை இறுதிப்போட்டி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இவருக்கு பந்து வீசறது கிரிக்கெட்ல கஷ்டமான வேலை.. 2 முறை மடக்கலாம் தொடர்ந்து முடியாது – கம்மின்ஸ் பேட்டி

இந்த நிலையில் பிளே ஆப் சுற்று போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும் குஜராத் அகமதாபாத் மைதானத்திலும் நடக்கின்றது. மேலும் இறுதிப்போட்டி மே 26ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் என்று கூறப்படுகிறது. ஒருவேளை இது மகேந்திர சிங் தோனிக்கு கடைசி ஐபிஎல் தொடராக இருந்து, சிஎஸ்கே அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறினால், அது மறக்க முடியாத ஐபிஎல் போட்டியாக அமையும். மேலும் இந்த அறிவிப்பு சிஎஸ்கே ரசிகர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

- Advertisement -