இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகிற 27ஆம் தேதி கான்பூரில் நடைபெற உள்ளது.
இதற்கான இந்திய அணி தேர்வு குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.
சென்னையில் நடைபெற்ற முதல் போட்டிக்கு முன்பாகவே ஆடுகளம் குறித்த தனது கருத்தை தெரிவித்த மஞ்சுரேக்கர் முதல் ஒன்றரை நாட்களுக்கு மட்டுமே வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருப்பதாகவும், அதற்குப் பிறகு முழுக்க முழுக்க ஆடுகளம் சுழற்சிக்கு சாதகமாக மாறிவிடும் என்பதால் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
ஆனால் இந்திய அணி மூன்று வேகம், இரண்டு சுழல் என கலவையான நிலையில் சென்னை டெஸ்ட் போட்டியில் விளையாடி நான்காவது நாளில் 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது. இருப்பினும் மூன்றாவது பந்துவீச்சாளராக குல்தீப் யாதவை இந்திய அணியில் சேர்த்திருக்க வேண்டும் எனவும் அவரை அவ்வளவு எளிதில் கழட்டி விட முடியாது எனவே அடுத்த டெஸ்ட் போட்டியில் அவருக்கான வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்று சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “குல்தீப் யாதவை அவ்வளவு எளிதாக அணியில் இருந்து தூக்கி விட முடியாது என்று நான் நினைக்கிறேன். ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக இல்லாவிட்டாலும் குல்தீப் யாதவ் விளையாடுவதால் இந்தியா மேலும் பலனடைந்திருக்கும் என்று நான் நம்புகிறேன். ஏனென்றால் இந்திய ஆடுகளங்களில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஒன்று அல்லது ஒன்றரை நாட்கள் மட்டுமே உதவியாக இருக்கும். அதற்குப் பிறகு ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக மாறுகிறது.
எனவே குல்தீப் யாதவை போன்ற ஒருவர் உங்கள் அணியில் இருக்கும் போது நீங்கள் அவரை அவ்வளவு எளிதாக வெளியேற்ற முடியாது. கான்பூரில் இந்திய அணி இந்த அணுகுமுறையை பின்பற்ற வேண்டும். ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக பச்சை நிறத்தில் இருந்தாலும் அல்லது சூரிய ஒளியில் இருந்தாலும் சில மணி நேரங்களுக்கு மட்டுமே அது கை கொடுக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க:நாங்க அஸ்வினுக்கு அந்த அநியாயத்த செய்றோம்.. நியாயமா இதைத்தான் செய்யனும் – தினேஷ் கார்த்திக் வலியுறுத்தல்
இதற்கு சிராஜ் மற்றும் பும்ராவே போதுமானவர்களாக இருப்பார்கள்” என்று கூறி இருக்கிறார். இரண்டாவது போட்டி வருகிற 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்று ஆறுதல் அடைய வேண்டும் என்று வங்கதேச அணியும் கடுமையாக போராடும் என்பதில் சந்தேகம் இல்லை.